அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 29, 2014

இறைவன் பேசும் தெய்வமா? பேசாத சிலையா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 19 இல் காளைக் கன்று என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: 

மூஸா நபியின் காலடி மண்ணை எடுத்து அதில் போட்டவுடன் அந்தச் சிற்பத்திலிருந்து ஒரு சப்தம் வந்தது. இதுதான் கடவுள் மூஸா வழி மாறிச் சென்று விட்டார் எனக் கூறி அம்மக்களை நம்ப வைத்து அதற்கு வழிபாடு நடத்தச் செய்து விட்டான். (திருக்குர்ஆன் 20:96) 

நம் விளக்கம்: 

திருக்குர்ஆன் 20:95-96 வசனத்துக்கு பி.ஜே யின் மொழியாக்கம்: 

சாமிரியே! உனது விஷயமென்ன? என்று (மூஸா) கேட்டார். அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது என்றான். 

தமிழின் பிற தமிழாக்கங்கள் எல்லாம் ஏறக்குறைய இவ்வாறே உள்ளன. அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் மொழியாக்கம்: 

சாமிரியே உன் விஷயம் என்ன என்று (மூஸா) கேட்டார். அவன் கூறினான், இவர்கள் காணாததை நான் கண்டேன். அந்தத் தூதர் கூறியவற்றுள் சிலவற்றை நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன் பின்னர் நான் அவற்றைத் தூக்கி எறிந்து விட்டேன். என் உள்ளம் இதனையே அழகு வாய்ந்ததாக்கிக் காட்டிற்று.

இந்த வசனத்திற்கு சிலர் தம் விளக்கத்தைக் காண்போம். 

1) அப்துல் வஹ்ஹாப் தன் அடிக்குறிப்பு 194 இல் 

அத்தூதர் (ஜிப்ரீலின்) காலடி மண்ணிலிருந்து ஒரு பிடி எடுத்து இக்காளைக்கன்று சிலை மீது நான் போட்டேன். ஏனென்றால் அத்தூதர் காலடி பட்டவுடன் அந்த இடங்களில் புற்பூண்டுகள் பசுமையாகக் கண்டேன் என்று சாமிரி கூறினான் என்று எழுதுகிறார். 

2) மௌதூதி 20:96 வசனத்தின் அடிக்குறிப்பு எண் இல், 

அய்யா! உருக்கப்பட்ட தங்கத்தின் தங்களின் (மூஸா நபி) காலடி மண்ணை நான் போட்டதுமே அதிலிருந்து சிறப்பு வாய்ந்த இக்காலைக் கன்று வெளிப்படலாயிற்று. தங்களின் காலடி மண்ணின் பாக்கியமாகும் இது என்று சாமிரி கூறியதாக எழுதுகிறார். 

3) தப்ஸீருல் ஹமீதின் 20:96 வசனத்திற்கு உத்தமபாளையும் மௌலானா தரும் விளக்கமானது. 

ஹஸ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குதிரையின் மீது ஏறி வந்ததையும் அக்குதிரை வழியில் வறண்ட இடங்களில் தன் கால்களை வைக்கும்போதெல்லாம் அக்காலடிப்பட்ட இடத்திலிருந்து அதே நொடியில் புற்பூண்டுகள் உண்டானதைப் பார்த்து இதில் விஷேசமிருக்கிறது எனக்கருதி அதிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வைத்துக் கொண்டான் என்று எழுதியுள்ளார். 

4) பக்கியத்துஸ் ஸாலிஹாத் வெளியிட்ட தப்ஸீரில் ஜிப்ரீல் வந்த குதிரையின் குளம்புபட்ட மண்ணெடுத்து இச்சிளைக்குள் போட்டுப் பார்த்தேன். இது கனைக்கத் துவங்கியது என்று எழுதப்பட்டுள்ளது. 

5) அன்வாருல் குர்ஆன், தூதரின் பாதத்தடியிலிருந்து ஒரு பிடியை (மண்ணை) எடுத்து அதன் வாயில் போட்டேன். அது சப்தமிட்டது என்று எழுதப்பட்டுள்ளது. 

மேலே கூறப்பட்ட விளக்கத்திலிருந்து 

1) ஒருவர் மூஸா நபியின் காலடி மண் என்கிறார். 2) ஒருவர் ஜிப்ரீலின் காலடி மண் என்கிறார். 3) ஜிப்ரீல் வந்த குதிரையின் காலடி மண் என்று ஒருவர் கூறுகிறார். 4) காளைக்கன்றின் சிலையிலிருந்து சப்தம் வந்தது என்கிறார் ஒருவர். 5) உருக்கிய உலோகக் கலவை தானே சிலையாகி சப்தமிட்டது என்கிறார் ஒருவர். 6) ஒருவரோ குதிரையின் காலடி மண் என்பதால் கன்றின் சிலை கனைத்தது என்கிறார். 

மூஸா நபியின் காலடி மண்ணுக்கு இத்தகு அற்புதம் இருப்பதை இஸ்ரவேல் மக்களும், பிர்அவுனும் அவன் கூட்டாளிகளும் அறியாமல் போனதுதான் ஆச்சரியம்தான். 

மண் எதில் வீசப்பட்டது? 

7) சிலர் காளைக்கன்றின் மீது என்றும், ஒருவர் காளைக் கன்றின் வாயில் என்றும், மற்றொருவர் உருக்கப்பட்ட தங்கத்தில் என்றும் இன்னொருவர் சிலைக்குள் என்றும் கூறுகின்றனர். 

8) மேலே கூறப்பட்டவர்கள் எல்லோரும் மண் என்பதில் ஒன்றுபடுகின்றனர். அந்த மண் எங்கிருந்து வந்தது? திருக்குரானின் மூலத்தில் மண் என்றும் வரவில்லை. சிலை என்றும் வரவில்லை. மண்ணையும் சிலையையும் அவர்கள் எங்கிருந்து கொண்டுவந்தனர். அதாவது மண்ணையும் சிலையையும் குறிக்கும் சொல் குர்ஆனின் மூலப்பாடத்தில் இல்லை. அதனால் மண்ணையும் சிலையையும் பற்றி மொழியாக்கத்தில் கூறவில்லை. சிலர் அடைப்புக்குள் மண்ணையும் சிலையையும் போட்டு எழுதுயுள்ளனர். அப்துல் ஹமீது பாகவி மண்ணையும் சிலையையும் வெளிப்படையாக எழுதியுள்ளார். 

9) திருக்குர்ஆனில் கூறப்படாத சொற்களாகிய மண்ணையும் சிலையையும் விளக்கத்தில் கொண்டு வந்து, நபிமொழியிலும் கூறப்படாத ஒரு கட்டுக் கதையை இவர்கள் கூறியுள்ளனர். அல்லாஹ்வும் ரஸூலும் கூறாததைக் கூறுபவர்கள் அவர்கள் மீது இட்டுக் கட்டியக் கூறிய குற்றத்திற்கு ஆளாவர். அல்லாஹ்தான் இவர்களை மன்னிக்க வேண்டும். 

இறுதியாக, பி.ஜே தர்கா வழிபாடு எனும் நூலின் பக்கம் 37 – இல் 

ஸாமிரி என்பவன் மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்தவன். அவன் தங்கத்தால் ஒரு காலை மாட்டைச் செய்து அதை இரத்தமும் சதையும் கொண்ட காலியாக ஆக்கி அதை சப்தமிடச் செய்தான். இந்த விபரங்களைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான். அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக்கன்றை (ஸாமிரி) வெளிப்படுத்தினான். அது சப்தமும் பட்டது.... (அல் குர்ஆன் 20:88-90) என்று எழுதியுள்ளார். 

1) படைக்கும் சக்தி அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கின்றது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் பி.ஜே அந்த சக்தி சாமிரிக்கு இருந்தது என்று நம்புகிறார். இது தவறாகும். 

2) திருக்குர்ஆனில் காளைக்கன்று என்றுதான் வருகிறது பி.ஜே காளைக் கன்றை மாடாக மாற்றிவிட்டார். 

தங்கத்தால் உருக்கப்பட்ட ஒரு சிற்பம் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. உலோக சிற்பத்தை சதையும், இரத்தமும் கொண்டதாக பி.ஜே மாற்றிவிட்டார். 

4) அதிலிருந்து ஒரு சப்தம் வந்தது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அதனால் உயிர் இருக்கிறது என்று முடிவுக்கு வந்து இரத்தமும் சதையும் அக்கன்றுக்கு பி.ஜே வைத்துவிட்டாரா? இன்றைய நாகரிக உலகில் பிளாஸ்டிக், தகரம் போன்றவற்றால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் அந்தந்த உருவங்களின் சப்தத்தை வெளியிடுவதால், அதற்கு உடலும், உயிரும், இரத்தமும், சதையும் இருக்கிறது என்று பி.ஜே ஒப்புக் கொள்வாரா?

5) இன்றைய நவீன கட்டட கலைஞர்களும் வியக்கவும் திகைக்கவும் செய்யுமளவுக்கு பிரமிடுகளைப் படைத்து பிரமிக்க வைத்த எகிப்தியர்களுடன் வாழ்ந்த சாமிரி ஒரு காளைக்கன்றின் உலோக சிற்பத்திலிருந்து ஒரு சப்தத்தைக் கொண்டு வர முடியாதா?

மொத்தத்தில் சாமிரிக்கு படைக்கும் ஆற்றல் வழங்கி அவனை அல்லாஹ்வின் தகுதிக்கு உயர்த்தி விட்டார்கள். இவர்கள் தங்களைத் தவ்ஹீது வாதி என்று தம்பட்டம் அடிப்பதுதான் இந்த நூற்றாண்டின் ஈடிணையில்லா ஜோக். 

6) 20:96 - இல் அந்தக் கன்றுக் குட்டி அவர்களுடன் எவ்விசயத்திற்கும் பதிலளிக்கவில்லை என்பதையும், மேலும் அவர்களுக்கு எந்தத் தீமையோ நன்மையோ செய்ய அதற்குத் தகுதியில்லை என்பதையும் அவர்கள் காணவில்லையா? என்று இறைவன் கேட்கிறான். இதிலிருந்து நாம் தெரிவது என்னவென்றால், கடவுள் என்றால், அவர் பேச வேண்டும்; தீமையோ நன்மையோ செய்ய வேண்டும். இந்த கன்றின் சிலை பேசாது. தீமையோ நன்மையோ செய்யாது. எனவே இது கடவுள் இல்லை. சிலை என்பதாகும். 

பி.ஜே யும் அவரைப் போன்றோரும், அல்லாஹ் வஹி அனுப்புவதை நிறுத்தி விட்டான். அதாவது பேசுவதை நிறுத்தி விட்டான் என்று நம்புகின்றனர். அப்படி என்றால், அல்லாஹ்வை சிலையாகிய பொய்த் தெய்வம் என்று நம்புவதாகும். (நவூதுபில்லாஹ்) என்பது விளங்கவில்லையா? 

41:31-32 எங்கள் இறைவன் அல்லாஹ் எனக்கூறி, அதில் நிலைத்திருப்பவர்களிடம் நீங்கள் அஞ்ச வேண்டாம்; கவலைப்படவும் வேண்டாம்; உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைப் பற்றிய நற்செய்திகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று (கூறியவாறு) வானவர்கள் இறங்குவர். (மேலும் அவர்கள்) நாங்கள் இவ்வுல வாழ்க்கையிலும், மறுமையிலும் உங்கள் நண்பர்கள் என்றும் கூறுவார். வஹி வரும் என்பதை இவ்வசனங்கள் காட்டவில்லையா?
Read more »

எழுதுகோலே இன்றைய ஆயுதம்! - ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள்


இக்காலத்தின் தேவை வாளல்ல; பயன்படவேண்டியது பேனாவே என்பதை நன்குணர்ந்து கொள்ள வேண்டும். நமது எதிரிகள் இஸ்லாத்திற்கெதிராக எழுப்பியுள்ள சந்தேகங்களும், பல்வேறு அறிவியல் தத்துவங்களினால், இறைவனின் உண்மையான மார்க்கத்தைத் தாக்க முயன்றதும், பேனா என்னும் ஆயுதம்தாங்கி, அறிவியல் மற்றும் அறிவின் முன்னேற்றப் போர்களத்தில் இறங்கி, இஸ்லாத்தின் ஆன்மீகக் கம்பீரத்தையும், அதன் அந்தரங்க ஆற்றலின் அற்புதத்தையும் உலகுக்குக் காட்ட வேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்தியது. 

இறைவனின் பேரருள் எனக்கு இருக்காவிடில், நான் ஒருக்காலும் இக் களம் புகும் தகுதி பெற்றிருக்கமாட்டேன். என் போன்ற ஓர் ஏழை மனிதனின் மூலமாக, அவனுடைய மார்க்கத்தின் கண்ணியம் வெளிப்பட வேண்டுமென இறைவன் விரும்பியது, அவனுடைய பெரருளேயாகும். எதிரிகள் இஸ்லாத்தின் மீது எழுப்பிய ஆட்சேபனைகளையும், தாக்குதல்களையும் ஒரு முறை நான் எண்ணினேன். அவற்றின் எண்ணிக்கை மூவாயிரத்திற்கும் குறையாமல் இருப்பதைக் கண்டேன். அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்குமென நான் நினைக்கின்றேன். மூவாயிரம் ஆட்சேபனைகள் எழுப்பப்படும் அளவுக்கு இஸ்லாம் அவ்வளவு பலகீனமான அடிப்படைகளைக் கொண்டதென யாரும் எண்ணிவிடவேண்டாம் இல்லை; ஒருக்காலும் அவ்வாறில்லை. கோணலான நோக்கமுடையவர்களின் அறியாமையின் விளைவே இந்த ஆட்சேபனைகள். பார்வை இல்லாத காரணத்தால், ஆட்சேபனைகளை எழுப்புகின்றவர்களுக்கு அவை தென்படுவதில்லை. உண்மையில், ஆட்சேபனை செய்கின்ற இப்பார்வையற்றோர் தடுமாறுகின்ற இடத்திலேயே உண்மையான கருவூலம் வைக்கப்பட்டுள்ளது. இது இறை ஞான தத்துவமேயாகும். மறைந்திருக்கும் இக்கருவூலத்தை உலகில் வெளிப்படுத்தவும் தூய்மையற்ற ஆட்சேபனைகள் என்னும் சக்தியை, அவ்வோளிவீசும் அணிகலன்களிலிருந்து துடைத்துத் தூய்மைப்படுத்தவும் இறைவன் என்னை அனுப்பியுள்ளான். எல்லா வகையான தீய எதிரிகளின் ஆட்சேபனைகளிலிருந்தும் திருக்குரானின் கண்ணியத்தை தூயதாக்க, இறைவனின் ஆவேசம் இப்பொழுது கொதித்தெழுந்துள்ளது. (மல்பூசாத் வால்யூம் 1 பக்கம் 57)
Read more »

Jun 28, 2014

நோன்பு பற்றி தவறான விளக்கம். (நாஸிக், மன்சூக் திருக்குரானில் இல்லை)


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 47 இல் நோன்பை விட்டு விடுவதற்குப் பரிகாரம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: 

ஆரம்பத்தில் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நோன்பு நோற்கச் சக்தி உடையோர் நோன்பு நோற்கலாம்: அல்லது ஒரு நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவு அளிக்கலாம் என்ற சலுகை இருந்தது அதுதான் இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 2:184) கூறப்பட்டுள்ளது. 

ரமலான் மாதத்தை அடைபவர் நோன்பு நோற்க வேண்டும் என்ற கட்டளை வந்த பின், சக்தி பெற்றவர் நோன்புதான் நோற்க வேண்டும் என்ற புதுச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டம் அடுத்த வசனத்தில் (2:185) கூறப்பட்டுள்ளது. (நூல்: புகாரி 4507) 

நம் விளக்கம்.

இவர் எடுத்துக் காட்டும் திருமறை வசனத்திற்கு இவர் கொடுத்துள்ள பொருளே தவறானது. இவரின் அரபி மொழி அறிவு இவ்வளவுதான் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். அல்லதீன யுத்தீகூனஹு என்பதன் பொருள் “நோன்பிற்கான சக்தியற்றவர் மீது” என்பதாகும். யுத்தீகூன என்ற வினை பாபெ இஃப்ஆல் ஆகும். இதன் ஒரு விசேஷம் அது ‘ஸலப்’ உடைய பொருள் தருகின்றதென்பதாகும். இந்தச் சட்டத்தின் படி இவர் குறிப்பிடும் வ அல்லதீன யுத்தீகூனஹு பித்யது தஆமிமிஸ்கீன் என்ற வசனத்திற்கு நோன்பிருக்க சக்தியற்றவர் ஒருவருக்கு பித்யாவாக உணவளிக்க வேண்டும் என்பதாகும். பி.ஜே ஏற்கனவே இது பற்றி கூறும்போது ‘யுதீகூன’ என்ற சொல் திருக்குர்ஆனில் இவர் குறிப்பிடும் அர்த்தத்திலேயே ஏனைய இடங்களில் (!) காணப்படுவதாக (!!) எழுதியிருந்தார் அந்த இடங்களை கூறினால் நன்றாக இருக்கும்! 

1) திருக்குர்ஆன் 2:186 வது வசனத்தின் சட்டம் 2:185 வசனத்தின் சட்டத்தை மாற்றிவிட்டது என்றால், இவ்வளவு முக்கியமான நோன்பு பற்றிய சட்ட மாற்றம் பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார் என்று பி.ஜே ஆதாரம் காட்ட முடியுமா?

2) 4505 வது ஹதீது 4507 வது ஹதீஸை மாற்றுகிறதா? 

4505 வது ஹதீது: 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (2:184) வது இறை வசனத்தை ஓதி இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று: நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும், தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கு பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும் என்று சொன்னார்கள். 

இது பற்றிய அடிக்குறிப்பில், 

நோன்பு நோற்கச் சக்தியில்லாமல் சிரமப்படுகிறவர்கள் ஒரு நோன்பிற்கு ஓர் ஏழை வீதம் உணவளித்திட வேண்டும். இது நோன்பே நோற்க இயலாத அளவிற்குத் தள்ளாத வயதில் உள்ள முதியோருக்குரிய சட்டமாகும். இச்சட்டம் இன்னும் நீடிக்கிறது. மாற்றப்படவில்லை. இது, அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) முதலானோரின் கருத்தாகும். (புகாரி : 5 அடிக்குறிப்பு 43). இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் கருத்தும் இதுவே ஆகும். 

அடுத்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் இச்சட்டம் நீடிக்கிறது: மாற்றப்படவில்லை என்றே கூறுகின்றார்கள் (தப்ஸீர் இப்னு கஸீர், பதஹுல் பாரி) 

இதன் மூலம் 2:186 வது வசனத்தின் சட்டம் 2:185 வது வசனத்தின் சட்டத்தை மாற்றவில்லை என்பது நிரூபணமாகிறது.
Read more »

அரபி மொழி உலக மொழிகளின் தாய்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 244 இல் அவரவர் மொழியில் வேதங்கள் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

இதன் காரணமாக ஒரு சமுதாயத்திற்கு தூதராக அனுப்பப்படுபவர் அச்சமுதாயத்தின் மொழியை அறிந்தவராகவே இருக்கிறார் என்று இந்த வசனம் (திருக்குர்ஆன் 14:4) கூறுகிறது. 

நம் விளக்கம்: 

அவரவர் மொழியில் வேதங்கள் என்று பி.ஜே கொடுத்துள்ள தலைப்பு தவறாகும். சமுதாய மொழியில் தூதர்கள் என்றுதான் மொழியாக்கம் செய்திருக்க வேண்டும். திருக்குர்ஆன் 14:4 வது வசனத்தில் “எந்த தூதரையும் அவர் சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்” என்றுதான் வருகிறது. 

அப்படிஎன்றால், முழு உலகுக்கும் தூதராக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாய மொழியாகிய அரபி மொழியை அறிந்துள்ளார் என்று ஏற்க வேண்டும். அல்லது இன்று முழு உலகமும் ஒரு சமுதாயமாக மாறிவிட்டதனால், அத்தனை சமுதாய மக்களின் மொழிகளுக்கும் தாய் மொழியாக அரபி மொழி இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். 

அரபி மொழிதான் சிறந்த மொழி என்று இஸ்லாம் கூறுவதாக நினைக்கக் கூடாது என்றும் அரபி மொழிதான் சிறந்த மொழி என்று எந்த இடத்திலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ திருக்குர்ஆன் கூறவில்லை என்று பி.ஜே எழுதியுள்ளார். (திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 227) இது தவறாகும்.

1) ஆனால் அனைத்து வேதங்களுக்கும் தாய் வேதம் உம்முல் கிதாப் – திருக்குர்ஆனே ஆகும். இதனை அல்லாஹ் அனைத்து நகரங்களின் தாய் நகரமான – உம்முல் குரா வாகிய புனித மக்கா நகரில் தன் தூதரைத் தோன்றச் செய்து உலகுக்கு அருளினான். அந்தத் தூதரோ அனைத்து நபிமார்களின் தாய் நபியாக – உம்மி நபியாக காத்தமன் நபியாக இருக்கிறார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. 

எனவே, ஒரு தாய் நபி, தாய் நகரில், தாய் வேதத்தை, உலகின் தாய் மொழியாகிய அரபி மொழியில் கொண்டு வந்துள்ளார். 

இவ்வாறு வேதத்துக்கு தாய் வேதம் இருப்பது போல், நகர்களுக்கு தாய் நகரம் இருப்பது போல், நபிமார்களுக்கு தாய் நபி இருப்பது போல், உலகில் உள்ள மொழிகளுக்கும் ஒரு தாய் மொழி இருக்க வேண்டும். அது அரபியே. 

ஒரு பொருள் மிகச் சிறந்தது என்பதற்கு. 

1)அது சிறந்த மூலப் பொருளால் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

2)குறைபாடு இல்லாமல் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். 

3)அத்தொழிலில் மிகச் சிறந்தவன் அதனை செய்திருக்க வேண்டும். 

4)அப்பொருள் மிகச் சிறந்த முறையில் மக்களுக்கு பயன்பட வேண்டும். 

இவ்வாறே திருக்குர்ஆனும், 

1) மிகச் சிறந்த மொழியில் அதாவது அரபியில் 

2) மிகச் சிறந்த கருத்துக்களை கொண்ட தாய் வேதமாக 

3) எல்லாம் வல்ல அல்லாஹ்வால் 

4) மனித குலம் முழுவதற்கும் பயன்படுவதற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

அரபி என்பதற்கு தெளிவானது என்று பொருள்.(திருக்குர்ஆன் 13:38) இந்த வசனத்தில் வரும் அரபி எனும் சொல் தெளிவான என்ற பொருளில் தான் எடுத்து ஆளப்பட்டுள்ளது. இதனால்தான் அரபியர்கள் பிற மொழிகளை அஜமி மொழி – தெளிவற்ற மொழி என்று அழைத்தனர். (திருக்குர்ஆன் 16:104) 

இதனைத்தான் பி.ஜே அரபு மொழி தான் ஒரேமொழி என்றும், மற்ற மொழி பேசுவோர் அஜமிகள் (கால் நடைகள்) என்றும் கூறும் அளவுக்கு அவர்களிடம் அரபுமொழி வெறி மிகைத்திருந்தது என்று எழுதியுள்ளார். (குர்ஆன் அருளப்பட்ட வரலாறு)

உலக மொழிகளின் தாய் மொழிக்கு என்னென்ன இலக்கணம் உண்டோ அவை அனைத்தும் அரபி மொழிக்கு முழுமையாக உண்டு. 

1) அரபி மொழியில் ஒரு சொல்லுக்கு இருக்கும் பொருள்கள் போல், பிற மொழியில் இல்லை. 

2) ஒரு பொருளை குறிக்கும் அதிகமான சொற்கள் அரபி மொழியில் இருப்பது போல் பிற மொழியில் இல்லை. எடுத்துக்காட்டாக, அரபி மொழியின் வளத்திற்கு இப்பெயர்கள் எடுத்துக்காட்டாகும். பிராணிகளுடைய வயதின் மாதம், ஆண்டுகளுக்கு ஒப்பவும் தனித்தனி பெயர்கள் உண்டு. ஒட்டகத்துக்கு 1000 பெயர்களும், சிங்கத்துக்கு 630 பெயர்களும், பாம்புக்கு 200 பெயர்களும், தண்ணீருக்கு 170 பெயர்களும், மழைக்கு 64 பெயர்களும் உண்டு. இத்தகு சொல் வளம் பெற்றிருப்பது அரபி மொழியின் பல்வேறு சிறப்புகளில் ஒன்றாகும். (ஆதாரம்: திருக்குர்ஆன் தர்ஜுமா மவ்லானா எம். அப்துல் வஹ்ஹாப், அடிக்குறிப்பு எண் 76) 

3) ஒரு கருத்தை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறன் அரபி மொழியில் இருப்பது போல் பிற மொழிக்கு இல்லை. 

இதனால் தான் அனைத்து மொழிகளையும் அறிந்த அல்லாஹ் தன் இறுதி வேதத்தை அரபி மொழியில் இறக்கியுள்ளான். இவ்வாறு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் சமுதாய மொழியாகிய அரபு மொழி உலக மொழிகளின் தாய் மொழியாகி உலகமே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் சமுதாயம் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களுக்கு இறைவன் “அரபி மொழியே உலக மொழிகளின் தாய் மொழி” என்று இல்ஹாம் அனுப்பியுள்ளான். இதன் அடிப்படையில் அவர்கள் “மினனுர் ரஹ்மான்” என்று ஒரு நூல் எழுதி அக்கருத்தை நிரூபித்துள்ளார்கள். தன் சஹாபிகளிடம் (தோழர்களிடம்) உலக மொழிகளின் தாய் மொழி அரபி மொழி என்பதை உலக மொழிகளுடன் அரபு மொழியை ஒப்பிட்டு அக்கருத்தை நிரூபித்துக் கட்டுங்கள் என்றும் கூறினார்கள். இதனால் ஏறக்குறைய, உலகின் 50-க்கும் மேற்பட்ட மொழிகளுடன் ஒப்பாய்வு செய்து அரபு மொழியே உலகின் தாய் மொழி என்று நிரூபித்துள்ளார்கள்.
Read more »

Jun 27, 2014

ஸாபியீன்கள் யார்?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை 443 இல் ஸாபியீன்கள் யார்? எனும் தலைப்பில் பி.ஜே., (11-வது பதிப்பு) 

இவ்வசனங்களில் (2:62; 5:69; 22:17) ஸாபியீன்கள் என்ற பிரிவினர் பற்றி கூறப்பட்டுள்ளது. 

ஹதீஸ்களை ஆராயும்போது ஸாபியீன்கள் என்போர் இறைத் தூதர்கள் அனுப்பப்படாத போதும் தங்களின் சிந்தனையைப் பயன்படுத்தி ஒரே கடவுள் கொள்கையை விளங்கிக் கொண்டவர்கள் என்பது தெரிய வருகிறது. ஏக இறைவனை விளங்கிக் கொண்டவர்கள் என்பது தெரிய வருகிறது. ஏக இறைவனை விளங்கி அவனுக்கு இணை கற்பிக்காத சமுதாயமே ஸாபியீன்கள் என்று கருதுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது என்று எழுதியுள்ளார். 

நம் விளக்கம்: 

பி.ஜே எடுத்துக் காட்டிய திருக்குர்ஆன் வசனங்களில் (2:63;5:70;22:18) 
  • நம்பிக்கை கொண்டோர் 
  • யூதர்கள் 
  • கிறித்தவர்கள் 
  • ஸாபியீன்கள் என்ற நான்கு கூட்டத்தினர் கூறப்பட்டுள்ளனர். 
இவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்து நற்கூலி பெறுபவர்கள் அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை; கவலைப்படவும் மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது முதல் கூட்டத்தினர். 

திருக்குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களையும் நம்பிய முஸ்லிம் கூட்டத்தினர். 

தவ்ராத்தையும் மூஸா நபி முதல் ஈஸா நபி வரை அதனைப் பின்பற்றி வாழ்ந்த யூத கிறித்தவர்கள். 

எனவே ஸாபியீன்களும் எதோ ஒரு வேதத்தையும் அதைக் கொண்டு வந்த நபியையும் பின்பற்றி வந்த ஒரு சமூகம் என்பது விளங்குகிறது. 

இக்கூட்டத்தினரின் பொதுப் பண்புதான் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்வதும் நற்கூலி பெறுவதும் கவலையும் அச்சமும் இன்றி வாழ்வது ஆகும். 

பி.ஜே எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸ்களை ஆராய்வோம். புகாரி 344: நபி (ஸல்) அவர்கள் ஸாபியீ என்று அழைக்கப்பட்டுள்ளார்கள். புகாரி 3522இல், நபித்தோழர் அபூதர் (ரலி) அவர்கள் ஸாபியீ என்று அழைக்கப்பட்டுள்ளார். புகாரி 4339, 7189 ஹதீஸ்களில், இஸ்லாத்தின் எதிரிகளுடன் நடந்தபோரில் அவர்கள் சரணடைந்து நாங்கள் ஸாபியீ ஆகிவிட்டோம் என்று கூறுகின்றனர். 

மேலே கூறப்பட்டுள்ளவற்றைத் தொகுத்துப் பார்த்தால், ஒரு வேதம் கொண்டு வந்த நபி ஸாபியீ என்று அழைக்கப்படுகிறார். 

ஒரு வேதம் கொண்டு வந்த நபியை ஏற்றுக் கொண்ட ஒரு நபித்தோழர் ஸாபியீ என்று அழைக்கப்படுகிறார். 

அந்த வேதத்தையும் அந்த நபியையும் நம்பாத மக்கள் போரில் சரணடைந்து போது நாங்கள் ஸாபியீ ஆகிவிட்டோம். அதாவது உங்களின் புதிய மார்க்கத்தையும் அதன் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறுகின்றனர். எனவே ஒரு நபியை அவர் கொண்டு வந்த வேதத்தையும் நம்பியவர்கள் ஸாபியீன்கள் என்று தெரிகிறது. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்படும் முன் கற்சிலையை வணங்க மறுத்து ஏக இறைவனை மட்டும் நம்பிய சமுதாயத்தினர் இருந்தனர். வணக்க வழிபாட்டு முறைகளைத்தான் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறை தூதர்கள் வழியாகத்தான் அறிய இயலும், இதைத் தவிர மற்ற விசயங்களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே ஸாபியீன்கள் என்று பி.ஜே கூறுகிறார். 

நான் கேட்கிறேன்: இந்த மக்களைப் பற்றி அக்கால மக்கள் அவர்களை ஸாபியீன்கள் என்று அழைத்ததாக சான்று உண்டா? இருந்தால் பி.ஜே எடுத்துக்காட்ட வேண்டும். 

மேலும் ஸாபியீன்கள் அடையாளமாகத் திருக்குர்ஆன் கூறுவது. 

அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புவதும், அதற்கேற்ப நல்ல செயல்கள் செய்வதும் ஆகும். இந்த நற்செயல் ஒரு நபியின் மூலமே வேதத்தின் வழியாகக் கிடைக்கிறது. எனவே அத்தகு நற்செயல்களும் நற்கூலியும் கிடைக்காத மக்களை ஸாபியீன்கள் என்று அழைப்பது தவறாகும். 

பி.ஜே கூறுகிறார்: “இன்றைக்கும் இறைத் தூதர்களின் போதனைகள் சென்றடையாத சமுதாயம் இருக்கலா. அவர்கள் ஸாபியீன்களாக வாழ்வதற்கு இறைவன் வழங்கிய அறிவே போதுமானதாகும்” பி.ஜே யின் இக்கருத்தும் சரியன்று. 

இன்றைய முஸ்லிம் உலகில், ஓர் இறை மறையும், ஓர் இறைதூதரின் நடைமுறையும் இருந்தும், வழிகேட்டு தௌஹீதுக்கு மாற்றமாக நடக்கும் மக்களுடன் மதிப்பிட்டால், அவர்களின் அறிவு மட்டும் போதும் என்று ஏற்க முடியுமா? எனவே பகுத்தறிவு மூலம் ஓரிறையை நம்புபவர்களை ஸாபியீன்கள் என்று கூற முடியாது. 

மொத்தத்தில் ஸாபியீன்கள் என்போர் திருக்குர்ஆனில் கூறப்படாத உலகில் வந்த எதோ ஒரு வேதத்தையும் அதனைக் கொண்டு வந்த நபியையும் பின்பற்றி, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஈமான் கொண்டு, அதற்கேற்ப நற்செயல்கள் செய்து நற்கூலியாக சொர்க்கத்தை அடையும் பிற சமூகங்கள் அனைத்தையும் குறிக்கும்.
Read more »

Jun 24, 2014

ஈஸப்னு மர்யம் என்பதன் விளக்கம்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 206 இல் நாடோடிகள் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார். 

நாடோடிகள் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் இப்னு ஸபீல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லின் நேரடிப் பொருள் பாதையின் மகன் என்பதாகும். 

ஒருவனிடம் ஒரு செயல் அதிக அளவில் காணப்படும் போது அச்செயலுடன் மகன் என்பதைச் சேர்த்துக் கூறுவது அரபியர்களின் வழக்கம். 

எப்போது பார்த்தாலும் போரில் பங்கெடுப்பவன் போரின் மகன் என்று குறிப்பிடுவது வழக்கம். எப்போது பார்த்தாலும் ஊர் ஊராகச் சென்று கொண்டிருப்பவன் பாதையின் மகன் என்று குறிப்பிடப்படுவான். 

சாதாரணமாகப் பயணம் செய்பவர்கள் இச்சொல்லால் குறிக்கப்படமாட்டார்கள். பயணமே வாழ்க்கையாக மாறியவர்கள்தான் இச்சொல்லால் குறிப்பிடப்படுவர். எனவே நாடோடிகள் என்பது இச்சொல்லுக்கு நெருக்கமான சொல் எனலாம். 

நம் விளக்கம்: 

இந்த விளக்கத்தை சிந்தனையில் வைத்துக் கொண்டு திருக்குர்ஆனின் இறைவன் ஈஸா நபியை இப்னு மர்யம் என்று கூறியிருப்பதையும் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் தன்னை ஈஸப்னு மர்யம் என்று கூறியிருப்பதையும் காண்போம். 

அல்லாஹ் திருக்குர்ஆனில் 66:13 இல் நம்பிக்கை கொண்டவர்களுக்கு எடுத்துக்காட்டாக மர்யம் (அலை) அவர்களைக் குறிப்பிடுகின்றான். ஏதோ பெயரளவில் நம்பிக்கை கொள்ளாமல் நம்பிக்கையையே தன் வாழ்க்கையாக கொண்டு வாழ்பவர்கள். அதில் முதன்மையாக விளங்குபவர்களை இப்னு மர்யம் என்று கூறவேண்டும். அதாவது எப்போதும் போரில் பங்கெடுப்பவன் போரின் மகன் என்று கூறுவதுபோல், வாழ்க்கையையே பயணமாகக் கொண்டவனை இப்னு ஸபீல் என்று கூறுவதுபோல், தன் வாழ்க்கையையே நம்பிக்கையாகக் கொண்டு வாழ்பவரை இப்னு மர்யம் என்று அழைப்பதே மிகப் பொருத்தம் ஆகும். 

அல்லாஹ் நம்பிக்கை கொள்வதற்கும் நிராகரிப்பிற்கும் பெண்களைத்தான் எடுத்துக்காட்டாக கூறியுள்ளான். நிராகரிப்போருக்கு நூஹ் மற்றும் லூத் நபியின் மனைவிமார்களையும், நம்பிக்கையாளர்களுக்கு பிர்அவ்னின் மனைவி மற்றும் மர்யம் (அலை) அவர்களை எடுத்துக்காட்டாகவும் கூறியுள்ளான். ஏன்? 

திருக்குர்ஆன் ஆண்களை நபிமார்களாகவும், அவர்களிடத்து விசுவாசம் கொள்கிறவர்களைப் பெண்களாகவும் கூறுகிறது. இவ்வாறே நபிமார்களை விசுவாசம் கொள்ளாதவர்களையும் பெண்களாகவே கூறுகிறது.

இதன் அடிப்படையில் ஒருவரை மர்யம் என்றோ பிர்அவ்னின் மனைவி என்றோ சொன்னால் அவர் நம்பிக்கையாளர் என்றும், ஒருவரை நூஹ் நபியின் மனைவி என்றோ லூத் நபியின் மனைவி என்றோ சொன்னால் அவர் காபிர் என்றும் பொருள். இவ்வாறே ஒருவரை இப்னு மர்யம் என்று சொன்னால் அவர் ஒரு மிகச் சிறந்த நல்ல மூமின் என்று பொருள். ஒருவருக்கு ஒரு தன்மை இருப்பதைக் காட்ட வேண்டுமாயின் அதனுடன் அரபியர் அபூ (தந்தை) இப்னு (தனயன்) அகு (சகோதரன்) என்ற பதங்களில் ஏதேனும் ஒன்றை அதனுடன் சேர்த்துக் கூறுவது அரபியரின் வழக்கம். இக்கருத்தில் தான் சந்திரன் இப்னுல் லைல் (இரவின் புதல்வன்) என்றும் அரபி நாட்டானுக்கு அக்குல் அரப் (அரபியரின் சகோதரன்) என்றும் வழிப்போக்கனுக்கு இப்னுஸ் ஸபீல் (பாதையின் மகன்) என்றும் அரபியர் கூறுகின்றனர். (தப்ஸீருல் ஹமீத் : 111 வது அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள விளக்கம்) 

நபித்தோழர்கள் இக்ரிமா (ரலி) அவர்களை பிர்அவ்னின் மகன் (இப்னு பிர்அவ்ன்) என்று கூறினார். காரணம் நபி (ஸல்) அவர்கள் அபூஜஹிலை, தன் காலத்தின் பிர்அவ்ன் என்று கூறினார்களா. எனவே நபித் தோழர்கள் அபூஜஹீலின் மகனை இப்னு பிர்அவ்ன் என்று அழைத்தனர். 

அவ்வாறே ஈஸப்னு மர்யம் என்றால், மிகச் சிறந்த மூமினாக இருந்து, ஈஸா நபியின் தகுதியை அடைந்தவர் என்று பொருள், அதாவது மர்யம் (அலை) அவர்களின் தகுதியிலிருந்து ஈஸா நபியின் தகுதிக்கு அல்லாஹ்வால் உயரத்தப்பட்டவர் என்று பொருள். 

இந்த அடிப்படையில்தான் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் தன்னை ஈஸப்னு மர்யம் என்று கூறினார்கள். 

மேலே சொல்லப்பட்ட எடுத்துக் காட்டுகளிலிருந்து தன்னை இப்னு மர்யம் என்று அல்லாஹ் அழைக்கிறான் என்று ஒருவர் கூறினால் மர்யம் (அலை) அவர்களின் மகனாகத் தான் இருக்க வேண்டும் என்று கூறுவது அவர் தன்னை அபூஜஹீல் என்று ஏற்றுக் கொள்வதாக பொருள். அதாவது அறியாமையின் தந்தை என்று தன்னைத்தானே ஏற்றுக் கொள்கிறார் என்பதாகும்
Read more »

Jun 23, 2014

மஸீஹ் என்றால் மிக நீண்ட பயணி என்றே பொருள்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 92 இல் மஸீஹ் என்னும் தலைப்பில் 2 ஆம் பதிப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

ஈஸா நபியின் இன்னொரு பெயர் மஸீஹ் யுக முடிவு நாளின் கடைசியில் வரவிருக்கிற தஜ்ஜாலையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸீஹ் எனக் கூறியுள்ளார்கள். ஈஸா நபியைப் போலவே தாஜ்ஜாலும் நீண்ட காலமாக உயிருடன் இருந்து வருகிறான்... எனவே மஸீஹ் என்பது இங்கு அரபி மொழிச் சொல்லின் பொருளில் பயன்படுத்தப்படவில்லை. நீண்ட காலம் வாழ்பவரை மெஸாயா என வேதமுடையோர் கூறி வந்தனர். மெஸாயா என வேதமுடையோர் கூறி வந்தனர். மெஸாயாவைத்தான் திருக்குர்ஆன் மஸீஹ் எனக் கூறுகிறது (பார்க்க திருக்குர்ஆன் 3:45, 4:157, 9:30-31, 4:171-172, 5:17, 5:72, 5:75) பி.ஜே யின் தமிழாக்கம் 2 ஆம் பதிப்பு 

நம் விளக்கம் 

திருக்குர்ஆன் 3:46 இல் அவர் பெயர் மஸீஹ் ஈஸப்னு மர்யம் என்று இறைவன் கூறுகிறான். திருக்குர்ஆன் 4:173 இல் அவரை மஸீஹ் என்று அழைக்கிறான். 5:18 இல் மர்யமின் மகன் மஸீஹ் என்றும், 5:79 இல் மர்யமின் மகன் ஈஸா என்றும் 3:56 இல் ஈஸா என்றும் அழைக்கப்படுகிறார். 

எனவே அவரது முழுப் பெயர் மஸீஹ் ஈஸப்னு மர்யம் என்பதாகும். அவர் மஸீஹ், ஈஸா, ஈஸப்னு மர்யம், மஸீஹ் ஈஸப்னு மர்யம் என்று முழுப் பெயரின் ஒரு பகுதியைக் கொண்டும் அழிக்கப்படுகிறார் என்றும் சொல்லலாம். 

தாஜ்ஜாலும் மஸீஹ் என்று நபி (ஸல்) அவர்களால் அழைக்கப்பட்டுள்ளான். தாஜ்ஜாலும், மஸீஹும் மிக நீண்ட காலம் வாழ்வதால் அவ்வாறு அழைக்கப்படவில்லை, இது பி.ஜே யின் தவறான கூற்றாகும். மஸீஹ் எனும் அரபிச் சொல்லுக்கு மிக நீண்ட பயணம் செய்பவர் என்று பொருள். இவ்விருவரும் மிக நீண்ட பயணம் செய்வதால் மஸீஹ் என்று அழைக்கப்பட்டனர். இவ்வாறு மஸீஹ் என்பது இங்கு இருவருக்கும் அரபி மொழிச் சொல்லின் பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

மிக நீண்ட காலம் வாழ்பவரை வேதமுடையவர்கள் மெஸாயா என்று கூறி வந்தனர் என்பதற்கு பி.ஜே தக்க ஆதாரம் தர வேண்டும். மொத்தத்தில் மஸீஹ் என்பதற்கு பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 92 இல் தந்த விளக்கம் சரியன்று. 

மஸீஹ் என்றால் மிக நீண்ட பயணம் செய்பவர் என்ற பொருளை திருக்குர்ஆன் 3:45 வது வசனத்தின் விளக்கத்தில், 1. தப்ஸீர் இப்னு காஸீர் 2. தப்ஸீருல் ஹமீத் 3. தப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் 4. அன்வாருல் குர்ஆன் 5. மௌலவி முஹம்மது அலி எழுதிய அடிக்குறிப்பு ஆகிய நூற்களிலும் காணலாம். 

திருக்குர்ஆன் 23:51 வசனம் நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயையும் ஒரு அடையாளமாக ஆக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும், நீரூற்றுகளைக் கொண்ட ஓர் உயர்ந்த இடத்தில் தஞ்சமளித்தோம் என்று கூறுகிறது. இதில் வரும் தஞ்சம், அடைக்கலம் எனும் சொல் உயிரையும் உயிரினும் மேலான ஈமானையும் காக்க ஹிஜ்ரத் செய்து வேறொரு இடத்திற்குச் செல்லுதல் எனும் பொருளில் வருகிறது. (பார்க்க 18:17; 8:27) 

எனவே, ஹஸ்ரத் ஈஸா மஸீஹ் சிலுவையிலிருந்து காப்பாற்றப்பட்டு ஹிஜ்ரத் செய்து காஷ்மீரில் அடைக்கலம் புகுந்தார் என்று தெளிவாகிறது. இவ்வாறு மஸீஹ் என்று அழைத்துள்ளான். இவ்வாறே தாஜ்ஜாலும் முழு உலகையும் சுற்றி வருவதால் நீண்ட பயணம் செய்வதால் அவனும் மஸீஹ் என்று அழைக்கப்படுகிறான். இவ்வாறே அல்லாஹ் மஸீஹ் எனும் சொல்லை அரபி மொழி கூறும் பொருளில்தான் பயன்படுத்தியுள்ளான். 

ஒரு சொல் ஒரு மொழியில் இருக்கும் போது அந்த மொழி தரும் பொருளில்தான் அதன் இலக்கியங்களில் எடுத்தாளப்படும் அச்சொல்லுக்கு பிற மொழி தரும் வேறொரு பொருளில் பயன்படுத்த வேண்டிய தேவை என்ன? ஒரு வாதத்திற்காக நீண்ட நாள் வாழ்பவர் எனும் பொருள் அதற்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்தப் பொருளைத் தரும் ஒரு சொல் அரபி மொழியில் இல்லையா? அந்த அளவுக்கு அரபு மொழி சொல் வளம் குன்றிய மொழியா?

பி.ஜே மஸீஹ் மிக நீண்ட பயணம் செய்தவர் என்னும் உண்மை கருத்தை மூடி மறைக்க, நீண்ட நாள் வாழ்பவர் எனும் தவறான கருத்தை வலிந்து புகுத்த முயன்றுள்ளார்.
Read more »

Jun 14, 2014

அவரவர் தம் மார்க்கத்தை சுதந்திரமாக பின்பற்றும் நிலை ஏற்படும் வரை போரிடுங்கள்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 54 இல் கலகம் இல்லாதொழிந்து என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

திருக்குர்ஆனின் 2:193, 8:39 ஆகிய இரு வசனங்களில் கலகம் இல்லாதொழிந்து தீன் அல்லாஹ்வுக்கு ஆகும் வரை போரிடுங்கள் என்று கூறப்படுகிறது. இவ்விரு இடங்களிலும் தீன் என்ற சொல்லுக்கு மார்க்கம் என்று பலரும் விளக்கம் கொடுத்துள்ளனர். 

இந்த விளக்கத்தின்படி மற்றவர்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்து ஏற்படுகின்றது. ஆனால் திருக்குர்ஆனின் பல இடங்களில் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. (திருக்குர்ஆன் 2:256, 10:99, 9:6, 109:6) 

அவ்வாறிருக்க மதமாற்றம் செய்யும் வரை போரிடுங்கள் என்று பொருள் கொள்ளவே முடியாது. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிமல்லாதவர்கள் குறிப்பாக யூதர்கள் கிறித்தவர்கள் யூத கிறித்தவர்களாகவே வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாகவும் இவ்வாறு பொருள் கொள்ள முடியாது. இவ்விரு வசனங்களிலும் அதிகாரம் என்று மொழி பெயர்ப்பதுதான் சரியானது. போர் என்று வந்து விட்டால் அதிகாரம் கைக்கு வரும் வரை போரிட வேண்டும் என்பதுதான் இதன் கருத்தாகும். 

நம் விளக்கம்: 

போர் என்று வந்துவிட்டால் அதிகாரம் கைக்கு வரும் வரை போரிட வேண்டும் என்று பி.ஜே எழுதியுள்ளார்! இது சரியா? சரி இல்லை. திருக்குர்ஆன் இக்கருத்தை மறுக்கிறது. திருக்குர்ஆன் 22:40-41 வசனங்களைப் பார்ப்போம். 

எவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளதோ அவர்களுக்குப் (போரிட) அனுமதி வழங்கப்பட்டுளளது. ஏனெனில் அவர்கள் மீது அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவ ஆற்றல் உள்ளவனாவான். எங்களின் இறைவன் அல்லாஹ் என்று சொன்னதற்காக மட்டும் அநியாயமாக அவர்களின் வீடுகளிலிருந்து விரட்டப்பட்டவர்களுக்கும் (போரிட அனுமதி உண்டு). இந்த வசனத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் மக்கத்து மாக்களால், 
  • தங்கள் இறைவன் அல்லாஹ் என்று சொன்னதற்காக மட்டும் முஸ்லிம்கள் அநியாயத்திற்கு ஆளாக்கப்பட்டனர். 
  • அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 
  • மக்காவிலிருந்து வெளியேறி மதீனாவில் அடைக்கலம் புகுந்தும் அவர்களை விடாமல் அவர்கள் மீது போர் திணிக்கப்பட்டது. 
  • எனவே தான், எவர்கள் மீது போர் திணிக்கப்பட்டதோ அவர்களுக்கு (போரிட) அனுமதி வழங்கப்படுகிறது என்று அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான். 
இவ்வாறு முஸ்லிம்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநியாயங்கள் எல்லாம் இல்லாது ஒழிந்து உண்மையான மத சுதந்திரம் கிடைத்து அல்லாஹ்வின் மார்க்கத்தை அப்படியே பின்பற்றி வாழும் நிலை ஏற்படும் வரை அவர்களுடன் தற்காப்பு யுத்தம் செய்யுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். 

எனவே, முஸ்லிம்களை கட்டாயபப்டுத்தி அவர்களின் மத வழிபாட்டைச் செய்ய விடாமல் தடுக்கின்ற அணியாயத்தையே இது சுட்டிக்காட்டுகிறது. 

திருக்குர்ஆன் 22:41 வசனத்தின் தொடர்ச்சியைக் காண்போம். 

மேலும் “அல்லாஹ் சில மனிதர்களுக்கு மற்றவர்களைக் கொண்டு பதிலடி கொடுக்க வைக்கவில்லையாயின் கோயில்களும், ஆலயங்களும், மடங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாக நினைவு கூரப்படும் பள்ளிவாசல்களும் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும்.
  • முஸ்லிமகள், பிற மத மக்கள் அவரவர்களின் மத வழிபாட்டை சுதந்திரமாக செய்ய உதவ வேண்டும் என்றும் கட்டளையிடுகின்றான். 
  • இந்த சமய கோயில்களும், கிறித்தவ ஆலயங்களும், யூத மடங்களும், முஸ்லிம் பள்ளிவாசல்களும் பாதுக்காக்கப்பட முஸ்லிம்கள் பாடுபட வேண்டும் என்றும் கட்டளையிடுகிறான். இதனையே அல்லாஹ் உதவுவதாக கூறுகின்றான். 
  • இவ்வாறு உலகின் மத சுதந்திரத்துக்கு யார் பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் உதவுவதாகவும் கூறுகிறான். 
  • இதற்கு மாற்றமாக செயல்படுபவர்களுக்கு மற்றவர்களைக் கொண்டு பதிலடி கொடுப்பதாகவும் அல்லாஹ் கூறுகிறான். 
ஆனால் பி.ஜே போன்றோர், ஈஸா நபி கியாமத் நாளில் வருவார் என்றும் அவர் சிலுவையை முறிப்பார் என்றும், பன்றிகளைக் கொல்வார் என்றும் நம்புகிறார்கள். கிறித்தவ ஆலயங்களில் உள்ள சிலுவைகளும், கிறித்தவ ஆடவர், பெண்கள், சிறுவர் சிறுமியர் கழுத்தில் அணிந்திருக்கும் சிலுவைகளையும் பறித்து அதனை முறிக்க வேண்டும் என்றும் நம்புகிறார்கள், இந்த இழிசெயல் பிற மத வழிபாட்டில், பிற மத மக்களின் சுதந்திரத்தில் தலையிட்டு, தன் கருத்துகளை அவர்கள் மீது திணிக்கும் செயல் அல்லவா? சிலுவை என்றால் அது மரத்தினாலும், உலோகத்தாலும் செய்யப்பட்ட சிலுவை என்று எண்ணுகின்றனர். அது சிலுவைக் கொள்கை என்றும் அக்கொள்கையை தவறு என்று நிரூபிப்பதன் மூலம் அக்கொள்கையை முறித்தலையே சிலுவையை முறித்தல் என்பதை உணரத் தவறிவிட்டனர். 

இவ்வாறே பன்றி என்றால் அல்லாஹ்வின் படைப்பாகிய பன்றி என்னும் உயிரினம் என்றும் அதனைக் கொல்லவே ஈஸா நபி வருகிறார் என்றும் நம்புகின்றனர். அப்படி எனில் அல்லாஹ் எதற்குப் பன்றியைப் படைத்தான்? பன்றி படைக்கப்பட்ட நாள் முதல் பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக அது கொல்லப்படவில்லையே? இப்போது மட்டும் ஏன் கொல்லப்படவேண்டும். ஈஸா நபி அதனைக் கொல்வார் என்றால் ஒரு உயிரினத்தைக் கொன்றதாக ஆகாதா? தனி மனிதர்க்கும், நாட்டுக்கும் உடைமையாக வளர்க்கப்படும் அப்பன்றிக் கூட்டத்தை கொன்று குவித்தால் அச்செயல் அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும், தன் மதக்கருத்துக்களை அவர்களின் மீது வலிந்து திணிப்பதாகவும் ஆகாதா? இஸ்லாம் இனிய மார்க்கம் என்பது இதுதானா? மேலும் உயிரினச் சங்கிலியால் ஒரு உயிரினம் முழு உலகிலும் கொல்லப்படுவதன் மூலம் பிற உயிரினத்திற்கு ஏற்படும் அழிவுக்கு ஈஸா நபியும் முஸ்லிம்களும் பொறுப்பாக மாட்டார்களா? பன்றியைக் கொல்வதற்கு ஒரு நபி வர வேண்டுமா? ஒரு நபி பன்றியைக் கொல்வதற்காக துப்பாக்கியும் கையுமாக அவற்றைத் துரத்தித் திரிவாரா? இது மனிதனுக்கு ஏற்ற மார்க்கமா? காட்டுமிராண்டி மார்க்கமா? பி.ஜே யின் இப்படிப்பட்ட நம்பிக்கை நகைப்பிற்கிடமாக உள்ளது. பன்றி என்றால் ஊரில் சுற்றித் திரியும் பன்றிகள் இல்லை. பன்றிக் குணம் கொண்ட மனிதர்களிடம் காணப்படும் தீய பண்புகளைக் கொல்லவே ஈஸா நபி வருவார் என்று அவர்கள் உணரத் தவறியதே காரணம். 

இறுதியாக இவ்வாறு ஈஸா (அலை) அவர்கள் வந்து பன்றியைக் கொல்வார், சிலுவையை முறிப்பார் என்று பி.ஜே நம்புவது திருக்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முற்றிலும் மாற்றமானதாகும். 

பன்றிகளை விட்டுவிடுவோம். மனிதர்களுள் அவர்களின் (ஈஸா நபியின்) பெருமூச்சு இறை மறுப்பாளர் மீது பட்டால் அவர் மரணிக்காமல் இருக்க மாட்டார். அவர்களின் பார்வை எட்டும் தொலைவுக்கு அவர்களின் பெருமூச்சு செல்லும் என்று முஸ்லிம் அல்லாதவர்களையும் தன் பெருமூச்சினால் அழிப்பார் என்று நம்புகிறார். 

வன்முறை சிந்தனையை தூண்டும் இது போன்ற தவறான கொள்கையை பி.ஜே கைவிடுவதே முஸ்லிம் சமுதாயத்திற்கு அவர் செய்யும் சேவையாக இருக்க முடியும். 

இவ்வாறு சிலுவைகளை முறிக்கின்ற பன்றிகளைக் கொல்கின்ற காபிர்களைக் கொல்கின்ற கொலை வெறியும். இரத்த வெறியும் கொண்ட ஒரு மஸீஹை தலைமுறை தலைமுறையாக இந்த பி.ஜே – க்கள் கூட்டம் எதிர்பார்த்து வருவதால்தானோ இந்த சமுதாயத்தில் சிலர் தீவிரவாத சிந்தனைக்கு ஆளாகிவிட்டனரோ என்று எண்ணத் தோன்றுகிறது! அல்லாஹ் நன்கறிவான்.
Read more »

Jun 10, 2014

ஹஜ்


பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண்களான 56, 57, 58, 59, 60 ஆகியவற்றின் நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டிய ஹஜ் குறித்து பி.ஜே இவ்வாறு எழுதுகிறார். அவை ஹஜ்ஜின் 3 வகைகள் பற்றிய விளக்கமாகும். 

இதில் ஹஜ்ஜின் மாதங்கள், ஹஜ்ஜின் போது வியாபாரம், தீண்டாமை, இரண்டு நாட்களில் புறப்படுதல் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. மொத்தத்தில் இவை ஹஜ்ஜைப் பற்றிய விளக்கங்களாகும். 

நம் விளக்கம்: 

1) நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் ஹஜ்ஜிற்குச் சென்றார்கள். மக்கத்து குறைஷிகள் அவர்களை ஹஜ் செய்ய விடாது தடுத்து விடுகிறார்கள். ஹுதைபியா உடன்படிக்கையின் போது முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற சொல்லை நீக்கச் சொன்னார்கள். அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று எழுதச் சொல்லி முஹம்மது அல்லாஹ்வின் ரஸுல் இல்லை என்பதுதான் தங்களின் கொள்கையாகும் என்று கூறினார்கள். இவ்வாறே, 

இன்று அனைத்துப் பிரிவுகளும் அஹ்மதிகளுக்கு எதிராக ஹஜ் செய்வதற்கு தடை விதிக்கிறார்கள். காரணம் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) பொய் நபி, எனவே அஹ்மதிகள் ஹஜ் செய்யக் கூடாது என்கின்றனர். 

இதிலிருந்து தடை செய்யப்படுபவர்கள் உண்மையான உம்மத்து என்பதும் தடை செய்பவர்கள் நபியின் பகைவர்கள் என்பதும் விளங்குகிறது அல்லவா? 

2) நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்வதாக கனவு கண்டு, அதன் அடிப்படையில் அந்த வருடம் ஹஜ்ஜுக்குச் செல்கிறார்கள், ஆனால் மக்கத்து மாக்கள் அந்த வருடம் ஹஜ் செய்ய முடியாதபடி திருப்பி அனுப்பி விடுகிறார்கள். ஆனால் அடுத்த வருடம் அந்த ஹஜ் நிறைவேறுகிறது. நபி (ஸல்) அவர்கள் தான் கண்ட கனவுக்கு கொடுத்த விளக்கம் தவறு என்பதால் அன்னாரை பொய் நபி என்று சொல்ல முடியுமா? 

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கண்ட கனவுகளைக் கூறும் இடங்களில் கனவு என்பதை மறைத்து உண்மை சம்பவம் போல் எழுதி ஓர் உண்மை நபி இப்படிச் சொல்வாரா என்று மறுப்பதால் அவர் பொய் நபி ஆகிவிடுவாரா? நபி (ஸல்) அவர்கள் சம்பவத்திலிருந்து ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் உண்மை நபி என்பது உறுதியாகிறது அன்றோ!

3) மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் ஹஜ்ஜுக்கு தம் வாழ்நாளில் செல்லவில்லை. ஒரு நபி என்றால் ஹஜ் செய்திருக்க வேண்டுமே! இவர் செய்யவில்லையே! எனவே இவர் பொய்யர் என்று எதிரிகள் கூறுகின்றனர். 

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஸக்காத்து கொடுத்ததே இல்லை. காரணம் ஸக்காத்து கொடுக்க வேண்டிய நிபந்தனைக்கு அவர்கள் ஆளாகவில்லை. எனவே அன்னார் ஸகாத்து கொடுக்க வில்லை. நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு தடவை கூட ஸகாத்து கொடுக்காததினால் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபி இல்லை என்று கூற முடியுமா?

இவ்வாறே ஹஜ் செய்ய வேண்டிய நிபந்தனைக்கு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் உட்படவில்லை. எனவே அன்னார் ஹஜ் செய்யவில்லை. இவ்வாறே ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் நபி என்பது உண்மையாகிறது. 

4) மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் காலத்தில் இந்தியாவில் பிளேக் நோய் பரவியது. எனவே, இந்தியாவிலிருந்து ஹஜ் செய்ய தடை விதிக்கப்பட்டது. 

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் தமக்குரிய அடையாளமாக பிளேக் பரவும் என்று முன்னறிவிப்புச் செய்திருக்கிறார்கள். இமாம் மஹ்தியின் காலத்தில் ஹஜ் செய்ய தடை ஏற்படும் என்ற நபிமொழியும் உண்டு. இவ்விரெண்டுமே அதாவது பிளேக் நோயும், ஹஜ்ஜுக்கு தடையும் அவர்கள் மஹ்தி என்று வாதித்த காலத்தில் நிறைவேறிவிட்டது. இவ்வாறு அவர் உண்மை நபி என்று நிரூபணமாகிறது. 

5) திருக்குர்ஆன் 22:28 வது வசனம். அவர்கள் ஹஜ் செய்ய நடந்தும், நெடுந் தொலைவிலிருந்தும், மெலிந்த ஒட்டகங்களிலும் உம்மிடம் வருவார்கள் என்று கூறுகிறது. 

அவ்வாறு யாரும் இன்று ஒட்டகங்களில் வருவதில்லை. அந்த ஒட்டகங்களை அரபிகள் கைவிட்டு விட்டனர். இவ்வாறு ஒட்டகங்கள் கைவிடப்பட்டு, அந்த இடத்தை நவீன போக்குவரத்து வாகனங்கள் இடம் பிடித்துக் கொண்டன. இவ்வாறு இமாம் மஹ்தியின் காலத்தில் நிகழும் என்ற முன்னறிவிப்பு உள்ளது. பத்து மாத கருவுற்ற பெண் ஒட்டகம் கைவிடப்படும் என்ற வசனமும் அதனையே கூறுகிறது. (திருக்குர்ஆன் 81:5)

6) நபி மொழிக் களைஞ்சியத்தில், மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது, ஏனைய பள்ளிகளில் தொழப்படும் 1000 தொழுகைகளை விட மேலானதாகும். திரு மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் என்னும் புனித கஆபா பள்ளியில் தொழுவது உலகின் மற்ற பள்ளிகளில் தொழப்படும் ஒரு லட்சம் தொழுகைகளை விட மிக மேலானதாக இருக்கும். (ஆதாரம்: முக்தஸர் அத்தர்ஹீபு வத்தர்ஹீபு, ஹதீஸ் எண் 389 இன் விளக்கவுரை) 

(கஆபா பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட ஒரு லட்சம் மடங்கு மேலானதாகும் என்று அஹ்மதி, இப்னு குஜைமா, இப்னு ஹிப்பான் ஆகியவற்றில் காணப்படுகிறது.) 

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தம் பள்ளியில் நஜ்ரான் கிறிஸ்தவர்களை அவர்களின் வழிபாட்டு முறையில் ஜபம் செய்ய அனுமதித்துள்ளார்கள். (ஆதாரம்: தப்ஸீர் இப்னு கஸீர் 3:61 வசனத்தின் அடிக்குறிப்பு) முஸ்லிம்களோ, தங்கள் பள்ளியில் காதியானிகள் நுழையக் கூடாது என்ற அறிவிப்பை கயிற்றில் கட்டி தொங்கவிட்டுள்ளார்கள். உங்கள் பள்ளி நபியின் பள்ளியை விட சிறந்ததுமில்லை. கிறிஸ்தவர்களை விடவோ ஏன் உங்களைவிடவோ நாங்கள் குறைந்தவர்களும் இல்லை எனபதை இதன் மூலம் உணருங்கள். அல்லாஹ்வின் பள்ளிக்கு வரத் தடை செய்பவன் அக்கிரமக்காரன் என்று திருக்குர்ஆனில் (2:115) வசனம் கூறுவதை உணருங்கள். 

7) கஆபா பள்ளியில் தொழுவது உங்கள் பள்ளியில் தொழுவதை விட 1,00,000 மடங்கு மேலானதாகும். அங்கு கேட்கப்படும் துஆவும் அவ்வாறே மேலானதாகும். 

நாட் கேட்கிறேன். ஹஜ்ஜுக்குச் செல்லும் நீங்கள் அப்பள்ளியின் கஆபாவில் சென்று அஹ்மதிய்யா ஜமாஅத் உண்மை என்றால், அதை ஏற்றுக் கொள்ளும் பாக்கியத்தை தரும்படியும். அது பொய் என்றால் அதனை அழித்துவிடுமாறும் துஆ கேட்கத் தயாரா? நீங்கள் உண்மையாளர் என்றால் நாங்கள் பொய்யர்கள் என்றால் உங்கள் துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். உலகில் அப்படி செய்ய முன் வருபவர் யாரும் உண்டா? 

8) இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள், புனித நகரமாகிய மக்காவையும், புனித ஹஜ் மாதத்தையும், அதன் புனித பத்தாம் நாளைப் போன்றும், ஒவ்வொரு மனிதனின் உயிரும், உடைமையும், மானம் மரியாதையும் புனிதமாகும் என்று கூறினார்கள். ஆனால் புனித நபி (ஸல்) அவர்களின் வாரிசுகள் என்று வாய்கிழிய பேசும் இந்த ஆலிம்கள், அஹ்மதிகளின் உயிர்களையும், உடைமைகளையும், மானம் மரியாதையையும் கொன்றொழித்து வருகிறார்கள். இவர்கள் ஆயிரம் முறை ஹஜ் செய்தாலும் அதன் கூலி இவர்களுக்கு கிடைக்குமா?
Read more »

Jun 9, 2014

ஆதம் நபி பற்றிய தவறான விளக்கம்


திருக்குர்ஆனுக்கு தவறான விளக்கம் வசனம் எண் 2:38) 

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 15 இல் அனைவரும் வெளியேறுங்கள் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

ஆதம் (அலை) அவரது மனைவி ஆகிய இவரைத்தான் அல்லாஹ் வெளியேற்றினான். அனைவரும் வெளியேறுங்கள் என்று ஏன் திருக்குர்ஆன் 2:38 வசனத்தில் குறிப்பிட வேண்டும்? என்று சிலர் நினைக்கலாம். 

உலகில் அழியும் வரை தோன்றும் அனைவரையும் அவ்விருவரும் தமக்குள் சுமந்திருந்தார்கள். அவர்களிடமிருந்து தோன்ற இருப்பவர்களையும் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

நம் விளக்கம்: 

1. ஆதம் நபி செய்த தவறுக்கு ஆதம் நபியும் ஹவ்வாவும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் கியாமத் வரை உள்ள எல்லாரும் சொர்க்கத்தினை இழந்து விட்டோம் என்று பி.ஜே கருதுகிறார்.. ஆதம் செய்த பாவம் பரம்பரை பரம்பரையாக மனித இனம் முழுவதும் பரவுகிறது. இது பரம்பரை பாவம் ஆகும் என்பது கிறிஸ்தவக் கொள்கையாகும். ஆதம் நபி செய்த தவறுக்காக நாமும் சொர்க்கத்தை இழந்து விட்டோம் என எண்ணுவது பி.ஜே கொண்டுள்ள கிறிஸ்தவக் கொள்கை ஆகும். 

2. பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 189 – இல், ஆதமின் முதுகுகளிலிருந்து என்று மட்டும் கூறினால் அவருடைய நேரடிப் பிள்ளைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும். ஆதமுடைய மக்களின் முதுகளிலிருந்து என்று கூறினால் ஆதமுடைய நேரடி மக்களையும், அந்த மக்கள் வழியாக தொடர்ந்து வரக்கூடிய அனைத்து மக்களையும் குறிக்கும். எனவே மிகவும் பொருத்தமாகவே இவ்வார்த்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. (திருக்குர்ஆன் 7:172) என்று எழுதுகிறார். 

பி.ஜே யின் இந்த வாதத்தின்படி இங்கு கியாமத் வரை உள்ளவர்கள் அனைவரும் வெளியேறுங்கள் என்ற பொருள் கொடுக்க வேண்டுமென்றால் 2:38 வது வசனத்தில் ஆதமின் சந்ததிகள் அனைவரும் வெளியேறிவிடுங்கள் என்று வந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு அவ்வாறு வரவில்லை. மாறாக இஹ்பித்து ஜமீஆ என்று மட்டுமே வந்துள்ளது. 

இவ்விடத்தில் ஜமீஆ என்ற சொல் வருவதால் கியாமத் வரை வரும் மனிதர்கள் அனைவரையும் குறிக்கும் என்று கூறுவதாயின் பி.ஜே வகுத்த இலக்கணத்தின்படி இஹ்பித்து ஜமீஆ என்பதுடன் சந்ததிகள் என்ற சொல்லும் வந்திருக்க வேண்டும். அவ்வாறு வராததால் பி.ஜே யின் வாதத்தின்படி பார்த்தல் கூட இங்கு ஆதமுடன் வாழ்ந்த மக்களை மட்டுமே குறிக்கும் என்பது நிரூபணம் ஆகிறது. 

3) நீங்கள் அனைவரும் வெளியேறுங்கள் என்று அல்லாஹ் கூறியிருக்கும் போது அதனை அப்படியே பொருள்கொள்வதுதான் அல்லாஹ்வுடைய வார்த்தைக்கு கொடுக்கும் கண்ணியமாகும். அதனை விட்டுவிட்டு கற்பனையாக சுயவிளக்கம் தருவது அல்லாஹ்வின் வார்த்தைக்கு மீறிய விளக்கமாகும். இதற்கு நபிமொழி ஆதாரம் எதுவும் இருந்தால் பி.ஜே தரும் வரம்புமீறிய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளலாம். 

4) அனைவரும் வெளியேறி விடுங்கள் எனபது வசனமாகும். 2:37 வது வசனத்தில் உங்களுள் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள் என்று இறைவன் கூறுகிறான். இதில் சிலர் மற்றும் சிலர் என்பதினால் சொர்க்கத்தில் பலரைக் கொண்ட ஒரு கூட்டம் இருந்துள்ளது என்பது விளங்க வில்லையா?
Read more »

Jun 8, 2014

ஜின்கள் யார்?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 154 இல், மனிதராக மாற்றித்தான் அனுப்புவான் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: 

தங்களைப் போலவே உண்டு பருகி குடும்பம் நடத்தும் ஒருவரை இறைவனின் தூதர் என்று நம்புவது மனிதர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. எனவே, வானவர்களைத் தூதராக அனுப்ப வேண்டியதுதானே? எனக் கேட்டனர். 

வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் ஒப்படைத்துச் செல்வதாக இருந்தால் வானவரை அனுப்பலாம். வேதத்திற்கு விளக்கம் கூறி நடைமுறைப்படுத்திக் காட்டத்தான் தூதர்கள் அனுப்பப்பட்டனர். 

எனவே, மனிதர்களுக்கு மனிதர்களைத் தான் தூதராக அனுப்ப முடியும். வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரையும் மனிதராக மாற்றித்தான் அனுப்புவேன் என்ற இறைவாக்கிலிருந்து (திருக்குர்ஆன் 6:9, 17:95) இதை அறியலாம். 

நம் விளக்கம்: 

1) வானவர்கள் வேறு, மனிதர்கள் வேறு. வானவர்கள் ஒளியாலும், மனிதர்கள் மண்ணினாலும் படைக்கப்பட்டவர்கள். எனவே வேதத்துக்கு விளக்கம் கூறி நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் என்றால் மனிதனுக்கு மனிதன்தான் தூதராக வர வேண்டும். வானவர்கள் வரமுடியாது. அப்படியே வானவர்கள் வருவதாக இருந்தாலும் அவ்வானவரையும் மனிதராக மாற்றித்தான் இறைவன் அனுப்புவான். இதை நன்கு நெஞ்சில் நிறுத்துங்கள். 

அப்படி என்றால் ஜின் என்பது நெருப்பினால் படைக்கப்பட்டது. மனிதனோ மண்ணால் படைக்கப்பட்டவன். ஜின்னுக்கு வேதத்தின் விளக்கம் கூறி நடைமுறைப்படுத்த மனிதன் வர முடியாது. அப்படியே மனிதன் ஜின் இனத்துக்குத் தூதராக அனுப்பபட்டாலும் அவனை ஜின்னாக மாற்றித்தான் அல்லாஹ் அனுப்புவான் என்பது உறுதியாகிறது. இதிலிருந்து ஜின்னுக்கு அவர் தூதராக அனுப்பப்பட்டார். இவர் நபியாக அனுப்பப்பட்டார் என்று மனித நபிமார்களைப் பற்றி நம்புவது தவறு என்று விளங்கவில்லையா? அப்படியே மனிதர்கள் தூதராக ஜின்னுக்கு அனுப்புவதாக இருந்தாலும் அந்தத் தூதர்கள் மனிதராக அனுப்பப்பட மாட்டார்கள் என்பதும், அவர்கள் ஜின்களாக மாற்றித்தான் அனுப்பப்படுவார்கள் என்பதும் தெளிவாகிறது. அவ்வாறு எனின், ஜின்னுக்குத் தூதராக அனுப்பப்பட்ட ஜின்தூதர் யார்? அவ்வாறு யாரும் இல்லை என்றால், திருக்குர்ஆனைக் கேட்பதற்கு வந்த ஜின்கள், மனிதர்கள் என்பதும், அந்த மனிதர்கள் ஜின் எனும் பெயரால் அழைக்கப்பட்டனர் என்பதும் தெளிவாகிறது. 

அதாவது, புறக்கண்ணுக்கு சாதாரணமாகத் தெரியாதவற்றை ஜின் என திருக்குர்ஆனும் நபிமொழியும் அழைக்கிறது. பாம்புகள் மறைந்து வாழ்வதால் (27:11) திருக்குர்ஆன் பாம்புகளை ஜான்னுன் எனக் கூறுகிறது. மரங்களின் நெருக்கத்தால் கண்ணால் பார்க்கமுடியாதபடி மறைக்கப்பட்டிருப்பதால் சொர்க்கம் தோட்டம் ஆகியவை ஜன்னத் என்று அழைக்கப்படுகிறது. (2:26) அறிவு மறைக்கபப்பட்டவன் அதாவது பைத்தியம் ஜின் என அழைக்கப்படுகிறான். அவர்களின் தோழருக்கு எந்தப் பைத்தியமும் இல்லை. ஜன்னதுன் (7:185) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. 

திருக்குர்ஆன் 63:3 இல், போர் ஆயுதங்களால் தாக்கப்படுவதைத் தடுக்கும் போர்க் கருவியாகிய கேடயம் ஜின் என்று அழைப்படுகிறது. இருள் மூடி பார்க்க முடியாதவற்றை ஜனன எனத் திருக்குர்ஆன் கூறுகிறது. (6:77) 

வயிற்றில் உள்ள கரு அஜின்னதுன் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது (53:33) எலும்புகளும், விலங்குகளின் விட்டைகளும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமிகளால் தின்னப்படுவதால் அவற்றை ஜின்களின் உணவு என நபிமொழி கூறுகிறது. 

பிறருடைய கண்களில் படாமல் மறைவாக வந்து சிலர் திருக்குர்ஆனைக் கேட்டுச் சென்றனர் என்று அறிகிறோம். அவர்கள் யூதர்கள் என்தால்தான், மூஸாவுக்குப் பின்னர் வந்த ஒரு வேதத்தை (திருக்குர்ஆனைக்) காது கொடுத்து மறைந்திருந்து கேட்டதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. (46:30, 72:2) 

திருக்குர்ஆன் மனிதர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அதனை மனிதத் தூதர் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களே வழிக்காட்டுவதற்குக் கொண்டு வந்தார்கள். எனவே அதனைக் கேட்டு தம் இனத்திடம் கொண்டு செல்லும் ஜின்களும் மனிதர்களே என்பது இதிலிருந்து தெளிவாகிறது. 

ஹஸ்ரத் சுலைமான் நபியின் அவையில் வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்ற ஒரு ஜின் இருந்திருக்கிறது (27:41) ஜின்களுக்கு வந்த வேதம் எது? ஜின்களுக்கு வந்த தூதர் யார்? அவர்கள் மனிதர்களே ஆவர். மனித இனத்தில் ஜின்கள் ஆற்றல் பெற்றவர்களாக இருந்துள்ளனர். அந்த ஆற்றல் மிக்கவர்களைக் கொண்டு (27:39-40) சுலைமான் நபி தன் பணிகளை விரைவாகச் செய்தார். கண்மூடித் திறப்பதற்குள் இருந்த இடத்திலிருந்து எழுவதற்குள் என்று கூறும் அளவில் மிக விரைவாக தன் பணிகளைச் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள். அதாவது சுலைமான் நபி ஓரிடத்தில் பாசறை அமைத்திருந்தால் அங்கு படைகள் தங்கி ஓய்வு எடுத்தது. அதிலிருந்து புறப்பட்டுச் செல்வதற்கு முன் சபா ராணியின் சிம்மாசனத்தை (ப் போல் ஒன்றைச் செய்து) கொண்டு வருவேன் என்றும், கண் மூடித்திறப்பதற்குள் என்றால், சுலைமான் நபி தூங்கி ஓய்வு எடுத்து புறப்பட்டுக் செல்வதற்குள் சபா ராணியின் சிம்மாசனத்தை(ப் போல் ஒன்றைச் செய்து) கொண்டு வருவேன் என்றும் கூறின. ஒரு நபியாகிய பேரரசர் அடுத்த நாட்டு ராணியின் சிம்மாசனத்தைத் தூக்கிக் கொண்டு வரச்சொல்வார் என்று நம்புவது எவ்வளவு அறிவீனம்? ஒரு நபியைப் பற்றி தரக் குறைவாக எண்ணுவதிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக. 

சாதரணமாக வெளி உலகத்துக்குத் தெரியாத, மக்கள் கண் முன் காணப்படாத மாபெரும் அறிஞர்கள், விஞ்ஞானிகள் ஜின்கள் எனப்பட்டனர். அவர்கள் விண்ணில் சென்று வானில் தம் ஆராய்ச்சியைச் செய்யக் கூடியவர்கள். வான் மண்டலத்தின் பாதுகாப்பு, கோள்களின் தன்மை ஆகியவை பற்றிக் கூறக்கூடியவர்கள் அவர்களை ஜின்கள் என்று திருக்குர்ஆன் (72:9-10) வசனங்கள் கூறுகின்றன. 

இறைத்தூதர்களுக்கு தீய மனிதர்களே எதிரிகளாக இருந்தனர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அவர்களுக்கு தீய ஜின்கள் இன்னார் இன்னார் பகைவர்களாக இருந்தனர். இந்த ஜின்கள் இப்படிப்பட்ட தீய செயல்களை நபிமார்களுக்கு எதிராகச் செய்தனர் என்று திருக்குர்ஆனும் நபிமொழியும் கூறவில்லை. மனிதர்களிலும் ஜின்களிலும் உள்ள செய்த்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம் என்று (6:113) வசனம் கூறுகிறது. எனவே இந்த ஜின் சைத்தான்கள் என்போர் மனிதர்களில் மறைந்திருந்து, பிற சாதாரண மனிதர்களைத் தூண்டி, நபிமார்களுக்கு எதிராக தீயவை செய்பவர்கள் ஆவர். அவர்கள் ஆற்றலும் அறிவும் மிக்கவர்கள் என்பதால் அவ்வாறு பிரித்துக் கூறப்படுகின்றனர். உதாரணமாக இன்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக ஒரு தீயவன் குறும் படம் எடுக்கிறான். ஒரு தீய சல்மான் ருஷ்டி தீய நூல் எழுதுகிறான் என்றால் இவர்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு இவர்களைத் தூண்டி இந்த இழி செயலைச் செய்யும் மறைவானவன் ஜின், சைத்தான் ஆவான். இவ்வாறு மனிதர்களும், ஜின்களும் என்று திருக்குர்ஆனில் வருமிடங்களில் மனிதர்கள் என்போர் சாதாரண மனிதர்கள் என்றும் ஜின்கள் என்போர் அசாதாரண மனிதர்கள் என்றும் அறிகிறோம். அதாவது தொழிலாளி முதலாளி, அஞ்ஞானி விஞ்ஞானி, ஆளப்படுபவன் ஆள்பவன், காட்சிக்கு எளியவன் (எளிதாகக் காணக் கூடியவன்) காட்சிக்கு அரியவன் (சாதாரணாமாக காண முடியாதவன்) ஆகியோர் ஆவர். 

இரண்டாவதாக, வேதத்துக்கு விளக்கம் கூறி நடைமுறைப்படுத்திக் காட்டத்தான் தூதர்கள் அனுப்பப்பட்டனர் என்பதாகும். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் முழுவதற்கும் விளக்கம் கூறிச் செல்லவில்லை. அன்னாரின் இறுதிப் பேருரையில் நான் கூறுபவற்றை எடுத்துச் சென்று பிறரிடம் கூறுங்கள். அவர்கள் உங்களை விட அதனை நன்கு அறிவார்கள் என்று கூறினார்கள். அதாவது அன்னார் கூறிய வேத வசனங்களுக்கும் நபி மொழிகளுக்கும் பிற்காலத்தில் உள்ளவர்கள் சிறந்த விளக்கத்தைக் கூறுவார்கள் என்பதாகும். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒட்டகம், குதிரை, கோவேறு கழுதை போன்றவைகளே வாகனங்கள் ஆகும். பிற்காலத்தில் நாம் வாழும் காலத்தில் நபித்தோழர்கள் எண்ணிப் பார்த்திராத வாகனங்களாகிய இரயில், விமானம், பேருந்து போன்றவை வந்துள்ளன. இதனைத்தான் திருக்குர்ஆன் நீங்கள் அறியாத வாகனங்கள் என்று கூறுகிறது. (16:9) இந்த வசனம் நமக்குப் பொருந்தும். எதிர் காலத்தில் நாம் அறியாத வாகனங்கள் வரும். எனவே திருக்குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் விளக்கம் கூறி அதனை விளக்க அவர்களுக்குப் பின்னரும் தூதர் வருவார் என்பது இதிலிருந்து விளங்குகிறது. 

ஜின்கள் தனி படைப்பு என்றால், அவர்களுக்கு மனிதனைப் போல எல்லா உறுப்புகளும் இருக்கின்றன என்றால், அவர்கள் எங்கு வாழ்கின்றனர்? எவற்றை உண்ணுகின்றனர்? எவற்றை உடுக்கின்றனர்? இல்லற வாழ்க்கையை எவ்வாறு நடத்துகின்றனர்? அவர்கள் எந்த வேதத்தை படிக்கின்றனர்? அது என்ன மொழியில் உள்ளது? அதைக் கற்றுக் கொடுத்தது, விளக்கி தூய்மைப்படுத்தி, நல்வழிப்படுத்த வந்த ஜின் நபிமார்கள் யார் யார்? அவர்கள் எப்படி மரணிக்கிறார்கள்? மரணிக்கின்றவர்களை எரிக்கின்றார்களா? புதைக்கின்றார்களா? அப்படியே ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டு விடுகின்றார்களா? அவர்கள் மனித இனத்துடன் எப்படி வணிகம் போன்ற உறவுகளைக் கொண்டுள்ளனர்? இவ்வாறு எழும் எல்லாக் கேள்விகளுக்கும் ஆதார பூர்வமான பதில் உண்டா? 

எனவே புறக்கண்ணுக்குத் தெரியாத உயிர்களை ஜின்கள் என்று திருக்குர்ஆனும் நபிமொழியும் கூறுகின்றன. திருக்குர்ஆன் மனிதர்களும் ஜின்களும் என்று கூறுமிடங்களில் வரும் ஜின்கள், மனித இனத்தின் ஒரு பிரிவாகும். மக்களின் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து வாழ்ந்த மனிதர்களும் ஜின்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
Read more »

பூமி அசையாதிருக்க நிறுவப்பட்டது மலைகளா? முளைகளா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 248 இல் முளைகளை நாட்டினோம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அதை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று கூறுகிறான். (திருக்குர்ஆன் 15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27, 78:7, 79:32) 

நம் விளக்கம்: 

மலை எனும் பொருளைத் தரும் ரவாஸிய எனும் சொல் வருமிடங்களாகிய 15:20, 16:15, 21:31, 27:61, 31:11, 41:11, 50:8, 77:28 ஆகிய வசனங்களில் முளைகள் என்று பி.ஜே மொழியாக்கம் செய்துள்ளார். இது தவறாகும். மேலும் இவ்விடங்களில் முளை எனும் பொருள் தரும் அவதாத் என்னும் சொல் வரவில்லை. இச்சொல் முளை எனும் பொருளில் 38:13, 89:11, 78:8 ஆகிய வசனங்களில் வருகிறது. 

மலைகள் பூமியில் முளைகள் போன்று அமைந்து பூமியைப் பாதுகாத்து அசையாத படி உறுதியாக நிலை நிறுத்தி வருகிறது. ஆனால் ரவாஸிய என்ற இச்சொல்லுக்கு மலைகள் என்றே பொருளாகும். 

ரவாஸி எனும் சொல்லுக்கு, Firm, anchored, fixed, towering, mountaion என்று முஹம்மது மொஹர் அலி தன் தர்ஜுமாவில் பொருள் கூறியுள்ளார். 

மலை எனும் பொருள்படும் ஜபல் எனும் சொல் 78:8 இல் வருகிறது. இங்கு தான் நாம் மலைகளை முளைகளாக அமைத்திருக்கிறோம் என்று அல்லாஹ் கூறுகிறான். ரவாஸி எனும் சொல் வருமிடத்தில் முளை என்று வரவில்லை. 

79:33 இலும் ஜபல் என்ற சொல் தான் மலையைக் குறிக்க வருகிறது. எனவே மலை என்று கூறவேண்டிய 8 இடங்களில் முளை என்று மொழியாக்கம் செய்திருப்பது தவறாகும். 

II திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 22 இல் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார். 

திருக்குர்ஆனில் 2:63, 2:93, 4:154 ஆகிய வசனங்களில் தூர் மலையை அல்லாஹ் உயர்த்தி உடன்படிக்கை எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. 

நம் விளக்கம்: 

திருக்குர்ஆனில் இந்த 3 வசனங்களிலும் (அதாவது 2:64, 2:94, 4:155) தூரை உயர்த்தி என்றுதான் வருகிறதே தவிர தூர் மலையை உயர்த்தி என்று வரவில்லை. மேலும் பி.ஜே எடுத்துக் காட்டும் 7:171 – இல் தூர் என்று வராமல் ஜபல் என்று வந்து மலையை உயர்த்தி எனும் பொருளில் வந்துள்ளது. எனவே தூர் என்றால் மலை என்று நாம் விளங்கிக் கொள்கிறோம். மேலும் அதிகாரம் 52 இன் பெயர் தூர் என்பதாகும். 52:2 வசனம் தூர் மீது சத்தியமாக என்று வந்து மலை மீது சத்தியமாக என்று பொருள் தருகிறது. எனவே தூர் என்றால் மலை என்று பொருள்படுவதால் தூர் மலை என்று கூறுவது சரியா என்ற கேள்வி எழுகிறது. 

தூர் என்பது ஒரு மலையின் பெயர். எனவே தூர் மலை என்று எழுதுவது சரிதான் என்று கூறினால் இதுவும் தவறுதான். ஏனென்றால் 95:3-4 ஸீனாய் மலை என்று வந்து அந்த தூரின் (மலை) பெயர் ஸீனாய் ஆகும் என்று தெரிகிறது. இந்த வசனத்தில் தூரின் பெயர் ஸீனாய் என்பதால், தூர் என்பது ஒரு மலையின் பெயர் என்பது தவறு என்று தெளிவாகிறது. 23:21 வசனத்திலும் ஸீனாய் என்று வந்துள்ளது காண்க. 

பி.ஜே மேலும் கூறுகிறார்: 

தூர் மலையை உயர்த்தியதாகக் கூறப்படுவதை அதன் நேரடிப் பொருளில்தான் புரிந்து கொள்ளவேண்டும். தூர் மலையை பிடுங்கினோம் என்றும் மேலே மேகம் போல் அது நின்றது என்றும் தங்கள் மீது அது விழுந்து விடுமோ என்று அவர்கள் அஞ்சினார்கள் என்றும் திருக்குர்ஆன் 7:171 வசனத்தில் கூறப்படுவதால் இதற்கு வேறு விதமான விளக்கம் கொடுப்பது தவறாகும். மலையை உயத்துவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானதே!

நம் விளக்கம்: 

7:171 இல் தூர் மலையை பிடுங்கினோம் என்று விளக்கத்தில் எழுதியுள்ளார். ஆனால் 7:171 வசனத்துக்கு அவர் எழுதியுள்ள பொருளைப் பார்த்தால், மலையை அவர்களுக்கு மேலே மேகத்தைப் போல் நாம் உயர்த்தி .... என்று தான் எழுதியுள்ளார். பிடுங்கினோம் என்று அந்த வசனத்தில் வரவில்லை. முன்பு கூறிய மூன்று வசனங்களிலும் வரவில்லை. பி.ஜே பிடுங்கினோம் என்று கூறியது தவறு என்று தெரிகிறது. ஒருவேளை மலையை உயர்த்தி என்பதனை பிடுங்கிய பின்னர் தான் உயர்த்த முடியும் என்பதால் பிடுங்கினோம் என்று எழுதியுள்ளார் போலும். ரபஅ உயர்த்துதல் என்பது உயிரற்ற பொருள்களுடன் வருமிடத்தில் பி.ஜே கூறியுள்ள பொருளில் வருவதாகத் தெரியவில்லை. உதாரணமாக, 

திருக்குர்ஆனின் 2:128 வசனத்தில் அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீம் இஸ்மாயீலும் உயர்த்திய போது என்று வருகிறது அதாவது காபா ஆலயத்திற்கு அடித்தளம் போட்டு பூமியினுள்ளிருந்து பூமிக்கு மேலே பல அடிகள் படிப்படியாக வளர்த்துக் கட்டுகிறார்கள். இதனை உயர்த்திய போது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதனை பி.ஜே அடித்தளத்தை பூமியிலிருந்து பிடுங்கி, பூமிக்கு மேலே அந்திரத்தில் உயர்த்தினார்கள் என்று எழுதுவாரா? இதனைப் போன்று தான் மலையை அவர்களுக்கு மேலே உயத்திய போது என்ற இடத்திலும் அவர்களின் தலைக்கு மேல் மிக மிக உயர்ந்து காணப்படுகிற அந்த மலையின் அடிவாரத்தில் அவர்களை நிறுத்திய போது என்று பொருள் கொள்ள வேண்டும். அந்த மலை அவர்களின் தலைக்கு மேல் மிக உயர்த்து நின்றது என்று பொருள் 41:11 இல், அவன் அதன் (பூமியின்) மேலே உறுதிமிக்க மலைகளை அமைத்தோம் என்று வருமிடத்தில் பூமிக்கு மேலே என்று வருவதால் பூமியில் படாமல் அந்தரத்தில் நிற்குமாறு பூமிக்கு மேலே மலைகளை அமைத்துள்ளான் என்று பி.ஜே கருதுவாரா? 

14:27 வசனத்தில் பிடுங்கப்பட்ட மரம்; பூமியின் மேல் எறியப்பட்ட மரம் என்று பொருள் தரும் படி, பிடுங்குதல் என்ற சொல்லும், பூமியின் மேல் என்ற சொல்லும் வருகிறது. இதற்கு ஒரு மரம் வேரோடு பிடுங்கப்பட்டு பூமியின் மேல் எறியப்பட்டுள்ளது என்று பொருள் கொள்ள வேண்டும். எனவே 7:171 வசனத்திற்கு நேரடிப் பொருள் கொள்வது தவறு. பிடுங்கினோம் என்றும் வரவில்லை. 

மேலும் அந்த 7171 வசனத்தில், தூர் மலையைப் பிடுங்கினோம், அது மேலே மேகம் போல் நின்றது. தங்கள் மீது அது விழுந்து விடுமோ என்று அவர்கள் அஞ்சினார்கள் என்றும் மலையை உயத்துவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானதே என்றும் பி.ஜே எழுதியுள்ளார். அந்த மலையும், மலைக்கு மேல் மிதந்து செல்லும் மேகங்களும் காணப்பட்டதால், மேகத்தின் அசைவு மலை அடைவது போலும் விழுந்து விடுவது போலும் காட்சி அளிக்கும். அல்லது குறைந்த ரிக்டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டு அந்த மலை அசைந்து தம் மேல் விழுவதைப் போல் தோன்றியிருக்கலாம். எனவே மலை பிடுங்கப்பட்டு மக்களின் தலைக்கு மேல் நின்றது என்பதற்கு இடமில்லை. அல்லாஹ் அம்மலையை தூக்குவது மிக எளிது என்றாலும், செய்யாத ஒன்றை அல்லாஹ் செய்தான் என்று கற்பனை செய்யக் கூடாது. ஏனென்றால் தொடர்ந்து அந்த வசனம், உங்களுக்கு நாம் வழங்கியதைப் பலமாகப் பிடியுங்கள். அதில் உள்ளதை எண்ணிப் பாருங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். அதாவது, ஒரு திருடன் கத்தி முனையில் காத்தியம் சாதிப்பதைப் போல், அல்லாஹ்வும் மலையைக் காட்டி மக்களை மிரட்டி தவ்ராத்தைப் பின்பற்றி நடக்கச் செய்தான் என்று எண்ணுவது போலாகும். அல்லாஹ் அப்படி ஒரு செயலைச் செய்வதிலிருந்து தூயவன். நம் அனைவரையும் அப்படி எண்ணுவதிலிருந்தும் அல்லாஹ் காப்பானாக. 

மலைகளில் மறைந்திருக்கும் மர்மம்

1956 ஆம் ஆண்டில் மலைகள் குறித்த மர்மம் ஒன்றை அறிவியல் உலகம் கண்டுபிடித்தது. மலைகளின் கெட்டியான வேர்கள் (Roots) பூமிக்கடியில் உள்ள திரவ மண்டலம் வழியாக, அவர்க்கும் கீழே உள்ள திட மண்டலத்தை அடைகிறது. இந்த வேர்களின் நீளம் பூமிக்கடியில் பல பத்து கி.மீ அளவுக்கு உள்ளது இந்த வேர்கள்தாம், பூமியின் மேல் தட்டை வலுவுடன் தாங்கி நிற்கிறது திரவ மண்டலத்தில் அது மூழ்கிவிடாமல் தடுத்து நிறுத்துகிறது. மிக ஆழமான வேர்களைக் கொண்ட மலைகள் பூமிக்குள் அமிழ்ந்து போவதில்லை. பூமிக்கடியில் திரவ மண்டலத்திற்குக் கீழே உள்ள திட மண்டலம்வரை நங்கூரம் பாய்ச்சி அது நிற்கிறது. இவை ஆம் ஆண்டில் அறிவியல் கண்டுபிடித்த சில உண்மைகள் (ஆதாரம்: அருள்மறை திருக்குர்ஆனும், அறிவியல் கண்டு பிடிப்புகளும், ஆசிரியர்: முஹம்மது கான்பாகவி) 

நம் கேள்வியாவது, மலைகள் பூமியில் பல மைல்கள் ஆழத்தில், பூமியின் அடுக்குகளை இணைத்து பிடித்துள்ளது. அது பிடுங்கும் போது பூமியின் மேற்பரப்பில் மலையின் பரப்பை விட பல மடங்கு பரப்பளவுக்கு மலையைச் சுற்றி பல மைல்கள் ஆழத்திற்கு ஒரு மிகப்பெரும் அதல பாதாள பள்ளம் ஏற்படும். மலை அடிவாரத்தில் உள்ள மக்கள் அதல பாதாளத்தின் அடித்தளத்திற்குச் சென்று சேர்ந்து விடுவார்கள். எங்கே உறுதி மொழி வாங்குவது? இது ஒரு புறம் இருக்கட்டும். இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் வரலாற்றில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இதனைப் பற்றி யூத வரலாற்றிலும் ஏனைய வரலாற்றிலும் காணப்படவில்லையே! மலை பிடுங்கப் பட்டால் பூமியிலுள்ள நெருப்புக் குழம்பு போன்ற பல பொருட்கள் அந்தப் பகுதி எங்கும் சிதறி பரவியிருக்கும். அவை என்னென்ன என்று அன்றே புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பல கருத்துக்களை வெளியிட்டிருப்பார்கள். எப்படி ஏதும் உண்டா? 

இது ஒருபுறம் இருக்கட்டும். இச்செயல் அல்லாஹ்வின் நடைமுறைக்கு மாற்றம் இல்லையா? கட்டாயப்படுத்தி அல்லாஹ் உடன்படிக்கை எடுப்பானா? அப்படி என்றால் அல்லாஹ் அந்த இஸ்ரவேல் சமுதாயத்தில் பல நபிமார்களை அனுப்பி, அவர்கள் அம்மக்கள் ஆட்டிப் படைக்கும் செயலை ஏன் செய்ய வேண்டும்? இந்த வேண்டாத வேலையை இறைவன் ஏன் செய்தான்? 

உலகில் ஆங்காங்கே உள்ள மலைகளை பிடுங்கி, வேதத்தைப் பின்பற்றி மரியாதையாக நடங்கள் என்று உறுதி மொழி வாங்கி விட வேண்டியது தானே? இது அல்லாஹ்வின் நடைமுறை இல்லை. அதாவது வேதத்தை மக்கள் பின்பற்றி நடக்கச் செய்ய அல்லாஹ் இந்த சுன்னத்தைக் கையாண்டதில்லை. 

எனவே, மலையை தலைக்கு மேலே உயர்த்தி என்பது மலையை பிடுங்கி அவர்களது தலைக்கு மேலே உயர்த்தி என்று பொருள் தராது.
Read more »