அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Apr 1, 2012

ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எங்கே இறந்தார்கள்?


"நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஒரு உயர்ந்த இடத்தில் தஞ்சமளித்தோம்." (திருக்குர்ஆன் 23:51)

இந்த வசனத்தில் அல்லாஹ் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களையும் அவர்களது தாயார் மர்யம் (அலை) அவர்களையும் "அல்லாஹ் உயிருள்ளவன். வல்லமையுள்ளவன்" என்பதை நிரூபிப்பதற்கான ஓர் அடையாலமாக்கினான் என்பது தெரிய வருகிறது. மேலும் ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களுக்கு அவர்களது எதிரிகள் அதிகமாக துன்பங்கள் கொடுத்தபோது அல்லாஹ் அவர்களையும் அவரது தாயாரையும் எதிரிகளின் தீமையிலிருந்து காப்பாற்றி தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஓர் உயர்ந்த இடத்தில் வாழச் செய்தான் என்பதை அல்லாஹ் இவ்வசனத்தில் குறிப்பிட்டுக் கூறியுள்ளான்.

மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு அஹ்மதிய்யா இயக்கத்தின் இரண்டாவது கலீஃபா ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத் (ரலி) அவர்கள் அளித்துள்ள விளக்கம் வருமாறு:

மேற்குறிப்பிட்ட வசனத்தில் "ஆவைனாஹுமா" "அவ்விருவருக்கும் நாம் தஞ்சமளித்தோம்" என்ற சொல் வந்துள்ளது. ஒருவரை மற்றொருவர் ஏதாவதொரு துன்பத்திளிருந்தோ, கவலையிளிருந்தோ காப்பாற்றி உதவி புரிவதைக் குறிப்பிடுவதற்கே அரபி மொழியில் "ஆவா" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. திருககுரானில் ஹஸ்ரத் ரசூல்(ஸல்) அவர்களைப் பார்த்து "அவன் உம்மை அநாதையாகக் கண்டு (தன் நிழலில் உமக்குப்) புகலிடம் அளிக்கவில்லையா?" (93:7) என்று இறைவன் கேட்கின்றான்.

இந்த வசனத்திலும் "ஆவா" என்ற சொல் மேற்குறிப்பிடப்பட்டுள்ள பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது "நீர் உமது தாயாரின் கருப்பையில் இருக்கும் போதே உமது தகப்பனார் இறந்து விட்டார். பின்னர் நீர் அநாதையாகி விட்டதைக் கண்ட இறைவன் தானாகவே உமது கருணையின் நிழலில் உமக்கு அடைக்கலம் வழங்கினான்" என்பதையே ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களிடம் அல்லாஹ் கூறியுள்ளான்.

"ஆவா" என்ற சொல் திருககுரானில் இதே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு இன்னும் சில உதாரணங்களைக் கீழே தருகிறோம்.

"நீங்கள் சிறுபான்மையினராக இருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். பூமியில் நீங்கள் பலவீனமாகக் கருதப்பட்டீர்கள். மக்கள் உங்களைப் பிடித்துச் சென்று விடுவார்களோ என்று பயந்தீர்கள். அவ்வாறிருந்தும் நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்தான். தன் உதவியினால் உங்களை உறுதிப் படுத்தினான். மேலும், தூய்மையானவற்றிலிருந்து உங்களுக்கு உணவு வழங்கினான். (8:27) அல்லாஹ் இந்த வசனத்தில் "ஆவா" என்ற சொல்லை ஒரு பெரும் துன்பத்திற்குப் பிறகு முஸ்லிம்களுக்கு அவன் மதீனாவில் அடைக்கலம் வழங்கி உதவி செய்த சந்தர்ப்பத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தியுள்ளான்.

அவ்வாறே வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்ட சமயத்தில் ஹஸ்ரத் நூஹ் (அலை) தமது மகனிடம் "எனது மகனே! எங்களுடன் நீயும் கப்பலில் ஏறிக்கொள்" எனக் கூறிய போது அவன் "நான் இப்பொழுது இந்த வெள்ளத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் ஏதாவதொரு மலையைச் சென்றடைந்து தங்கிக் கொள்வேன்" (11:44) என்று பதில் கூறுவதாக வரும் திருக்குர்ஆன் வசனத்திலும் "ஆவா" என்ற சொல் மேற்குறிப்பிடப்பட்ட பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹஸ்ரத் யூசுப் (அலை) அவர்களுடன் பிறந்த அவர்களது சகோதரர் புன்யாமீன் மீது அவர்களது மற்ற சகோதரர்கள் பெரும் பெரும் கொடுமைகளை இழைத்ததால் அவர்கள் மிகுந்த துயரத்துடன் தமது நாட்களைக் கழித்து வந்தார்கள். ஹஸ்ரத் யூசுப் (அலை) அவர்களிடம் அவர் திரும்பி வந்தபோது தனது சகோதரருக்கு பெரும் துயரத்திலிருந்து அவர்கள் அடைக்கலம் வழங்கியது பற்றி திருககுரானில் இவ்வாறு வந்துள்ளது:

"அவர்கள் யூசுபிடம் சென்றபோது, அவர் தம் சகோதரரை தம் பக்கத்தில் இடமளித்து (அவரிடம்) நிச்சயமாக நானே (காணாமற் போன) உம்முடைய சகோதரன். எனவே, இவர்கள் செய்து கொண்டிருப்பது குறித்து நீர் கவலையடைய வேண்டாம்" என்றார். (12:70)

"ஆவா" என்ற சொல் மேற் குறிப்பிடப்பட்ட பொருளில்தான் இந்த வசனத்திலும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

அரபி அகராதியின்படி "ஆவா இலா மன்சிலிஹா" என்று கூறினால் அது அமைதியற்ற ஓர் இடத்திலிருந்து அமைதியான ஓர் இடத்திற்கு ஒருவர் வந்து சேர்ந்ததைத்தான் குறிப்பிடும். இந்தப் பொருளில்தான் "அல்லாஹும்ம ஆவா இலா ஸில்லி கரமிக வ ஆஃபிக" எங்கள் இறைவா! உனது கருணை, மன்னிப்பு ஆகியவற்றின் நிழலில் எனக்கு அடைக்கலம் வழங்குவாயாக" என்று நாம் அல்லாஹ்விடம் துஆ செய்கின்றோம் . (ஆதாரம் அரபி அகராதி நூல் "அகரப்" )

எனவே திருக்குரானின் (23:51) வசனம் அல்லாஹ் ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களுக்கும் அவர்களது தாயாருக்கும் ஒரு பெரும் துன்பத்திலிருந்து இரட்சிப்பை வழங்கி இவ்வுலகிலேயே அவ்விருவருக்கும் தங்குவதற்கேற்றதும்  நீரூற்றுகளைக் கொண்டதுமான ஓர் உயர்ந்த இடத்தில் தஞ்சமளித்தான். என்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில், "ஆவா" என்ற சொல்லின் பொருள் "அவன் துன்பத்திலிருந்து இரட்சிப்பை வழங்கி அடைக்கலம் தந்தான்" என்பது மட்டுமேயாகும்.

வரலாற்றைக் கவனமாகப் பார்க்கும் போது ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களுக்கும், அவரது தாயாருக்கும் அடைக்கலம் தேவைப்படும் அளவில் சிலுவை சம்பவத்திற்கு முன்பு எந்த ஒரு பெருந்துயரமும் எந்தக் காலக் கட்டத்திலும் வரவில்லை என்பது தெளிவாகத் தெரியும். சிலுவை சம்பவம்தான் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களுக்கும் அவரது தாயாருக்கும் கடுமையான துன்பத்தைத் தந்தது. இறைவன் தனது அளவற்ற அருளால் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களை சிலுவை மரணத்திலிருந்து காப்பற்றி இருப்பதால் அவர்கள் வேறொரு நாட்டிற்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டியது அவசியமானதாக இருந்தது. ஏனெனில், ஸாம் நாடு ரோமானிய அரசுக்குக் கீழிருந்ததால் ரோம் நாட்டு மன்னர் கிசருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கிளர்ச்சி செய்தனர்.

ஹஸ்ரத் ஈசா (அலை) அதே நாட்டில் தொடர்ந்து வாழ்ந்து வந்தால் நிச்சயமாக அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பார்கள். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு அவர்கள் தமது நாட்டை விட்டு இடம் பெயர்ந்து வேறு நாட்டிற்கு செல்ல கட்டளையிட்டான். வரலாற்று சாட்சிகளின்படி இந்த இடம் காஷ்மீர்தான். என்பது தெரிய வந்துள்ளது. இந்த பகுதி நீரூற்றுகளும் செழிப்பான தோட்டங்களும் நிறைந்த அழகிய சூழலைக் கொண்ட நகரமாக இருப்பதால் இதனை சொர்க்கத்திற்கு இணையாக மக்கள் புகழ்ந்து கூறுகின்றனர். மேலும் "காஷ்மீர்" என்ற சொல்லே ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களின் காஷ்மீர் பயணத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

ஏனெனில், காஷ்மீரிய மொழியில் "காஷ்மீர்" என்பதற்கு பகரமாக "கஸீர்" என்றுதான் காஷ்மீர் அழைக்கப்படுகிறது. இது உண்மையிலேயே ஒரு எபிரேய மொழியின் சொல்லாகும். "காஃப்" என்ற சொல்லும் "அஸீர்" என்ற சொல்லும் இணைந்தே இந்தச் சொல் உருவாகியுள்ளது. "காஃப்" என்ற சொல்லின் பொருள் "அதைப் போன்றது" என்பதாகும். எபிரேய மொழியில் "அஸீர்" என்றால் ஸாம் நாடு என்பதுதான் அதற்குப் பொருள். எனவே, கஸீர் என்பதன் பொருள் "ஸாம் நாட்டைப் போன்றது" என்பதாகும். காஷ்மீரிய மொழியில் காஷ்மீருக்கு "கஸீர்" என்றுதான் இன்றும் கூறப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. காஷ்மீரில் வாழ்பவர்களை காஸ்மீரில் உள்ளவர்கள் "காஸீர்" என்றே அழைக்கின்றனர்.

எபிரேய சமுதாயத்தினர் காஷ்மீரில் வாழ்ந்தனர் என்பதற்கு "காஷ்மீர்" என்ற சொல் மட்டும் சான்றாக இல்லை. மாறாக, வரலாற்று நூல்களிலிருந்தும் இன்றிலிருந்து இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இஸ்ரவேல் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு நபி காஷ்மீர் வந்திருந்தார் என்றும் அவர் இஸ்ரவேல் சந்ததியிலிருந்து தோன்றியவர் என்றும் அந்த நபி இளவரசர் என்று அழைக்கப்பட்டார் என்பதெல்லாம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரது கல்லறை கான்யார் வீதியில் உள்ளது. அது யூஸ் ஆஸப்பின் கல்லறை என்றே பிரபலமாகியுள்ளது. இந்தச்சொல் "இயே ஆஸப்" என்ற சொல்லிலிருந்து வந்த திரிபு சொல்லாகும். இதனை அஹ்மதியா இயக்கத்தை தோற்றுவித்த ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) தமது ஒரு நூலில் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.

எபிரேய மொழியில் "ஆஸிப்" என்ற சொல் தமது சமுதாயத்தைத் தேடிச் செல்பவரைக் குறிக்கும். மேலும் "யூஸ்" என்ற சொல் "இயேசு" என்ற சொல்லின் திரிபு சொல்லாகும். ஈசா (அலை) அவர்களுக்கு இந்தப்பெயர் வைக்கப்பட்டதன் காரணம் அவர்கள் பஹதே நஸர் என்ற மன்னரின் காலத்தில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பத்து இஸ்ரவேல் கோத்திரத்தினரை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு இறைவனின் தூதுச்செய்தியை எட்ட வைக்கப் பயணம் மேற்க்கொண்டதேயாகும். பஹதே நஸர் என்ற மன்னர் அந்த இஸ்ரவேல் கோத்திரத்தைச் சார்ந்தவர்களை அடிமைகளாக்கி அவர்களை அப்கானிஸ்தானிலும் காஷ்மீரிலும் குடியேறச் செய்தார்.

ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் தனது வருகையின் நோக்கம் குறித்து பின்வருமாறு கூறியுள்ளார்கள் :

'காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனே அன்றி மற்றபடியல்ல' (மத்தேயு 15:24)

'இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே எனக்கு ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டு வரவேண்டும், அவைகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். (யோவான் 10:16)

ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் தமது சீடர்களுக்கு ஒரு முறை தனது தூதுச் செய்தியை பரப்புவது குறித்து அறிவுரை கூறும்போது இவ்வாறு கூறுகின்றார்கள்:

'நீங்கள் புற ஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். ' (மத்தேயு 10:4,5)

இந்த மேற்கோள்களிலிருந்து பாலஸ்தீனத்தில் வாழும் யூதர்களுக்கு ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எவ்வாறு இறை தூதுச் செய்தியை எட்ட வைத்தார்களோ அவ்வாறே கிழக்கத்திய நாடுகளிலும் வாழும் யூதர்களுக்கும் இறைவனின் தூதுச் செய்தியை எட்டவைப்பது அவர்களது கடமையாக இருந்தது. அந்த யூதர்களும் அவர்களது குரலை ஏற்று நடக்க வேண்டியிருந்தது. ஏனெனில், ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களின் கூற்றுப்படி பாலஸ்தீனத்தின் ஆடுகளிலிருந்தும் அவர்களை ஏற்றுக்கொண்டவர்கள் மிகவும் குறைவானவர்களாவார்கள். ஆனால், மற்ற ஆடுகள் அவரது குரலைக் கேட்டதும் மிக விரைவில் ஒன்று கூடிவிடும் நிலையில் இருந்தன.

இந்த முன்னறிவிப்புகளுக்கேற்ப அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுத்தான். முதலில் பாலஸ்தீனத்தில் அவர்களுக்கெதிராக எதிர்ப்பு கிளம்பியது. இறுதியில் அரசாங்க தரப்பிலிருந்து நாட்டிற்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக அவர்கள் மீது தீர்ப்பு கூறப்பட்டது. ஆனால் அல்லாஹ் எவ்வாறு யோனாதீர்க்கதரிசியை மரணத்தின் வாயிலிருந்து காப்பாற்றினானோ அவ்வாறே ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களையும் சிலுவை மரணத்திலிருந்தும் காப்பாற்றினான். ஏனென்றால் இதற்குப் பிறகு அவர்கள் தமது நாட்டில் இருக்க முடியாத நிலை ஏற்ப்பட்டது. அதற்க்கான காரணம் எவரைக் குறித்து அரசாங்கம் ஒருமுறை அவரை சிலுவையிலேற்றி கொள்ள வேண்டும் என தீர்மானித்து விடுகிறதோ அப்படிப்பட்டவர் தப்பித்துச் சென்றாலும் அவர் மீண்டும் பிடிபடும்போது அவர் கொல்லப்படுவது உறுதி. எனவே, ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் அந்த நாட்டைத் துறந்தார்கள். பாலஸ்தீனத்தை விட காஷ்மீர், ஆப்கனிஸ்தான் ஆகிய பகுதியிலுள்ள வழி மிகவும் அபாயகரமானதாக இருந்தது. என்றாலும், அவர்கள் இடம்பெயர்ந்து இந்த நாடுகளுக்கு வந்தார்கள்.

திருக்குர்ஆன் கூறுவது போன்று தங்குவதர்க்கேற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான காஷ்மீரைத்தான் அல்லாஹ் அவர்கள் இடம்பெயர்ந்து செல்லும் இடமாக்கினான். அவர்கள் அங்கு எவ்வித இடையூறுமின்றி சமாதானத்துடனும் சுகத்துடனும் தங்கி வாழ்ந்து வந்தார்கள். காஷ்மீரில் நீரூற்றுகள் மட்டுமின்றி இந்தப் பகுதி தனது குளிர்ச்சியிலும் செழிப்பிலும் ஸாம் நாடு போன்று இருந்ததால் அங்குச் சென்றதும் அவர்களது எல்லாத் துன்பங்களும் நீங்கி விட்டன. அவர்கள் தமது 120 வது வயது வரை இறைவனின் தூதுச் செய்தியை மக்களுக்கு எட்ட வைத்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்கள் அங்கேயே மரணித்தார்கள். பின்னர் ஸ்ரீ நகரிலுள்ள கான்யார் பகுதியில் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். இன்று வரை அவர்களது கல்லறை அங்கு இருந்து வருகிறது. ( தப்ஸீரே கபீர் பாகம் 6 பக்கம் 175 லிருந்து 179 வரை)

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.